பக்கம்:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அந்த வெற்றி வீரனுக்கு - வெறியன் தந்த பரிசு மூன்று குண்டுகள் - அடிமைகளின் வீடுதலையைப் பெற்றுத் தந்த ஆபிரகாம் லிங்கன்மீது ஆங்கோர் வெறியன் குண்டு வீசியது போல.

இவ்வளவு பெரிய துணைக் கண்டத்துக்கு விடுதலையை வாங்கித் தந்தவர், நாட்டு மக்களின் ஏழ்மைக்கோலத்தைக் கண்டார்- கருத்திலே அக்காட்சி கலந்தது. அவர், அவர்களில் ஒருவராகவே வாழலானார். "எல்லாம் மாயம்; உலகமே இந்திர ஜாலம்,"என்று உபதேசிக்கும் குருமார்கள்: தங்கப் பாதக் குறடும்,வைரம் இழைத்த குண்டலங்களும் அணிந்துகொண்டிருக்கக் கண்ட மக்கள் முன்பு எவ்வளவு சுகமும் வசதியும் நினைத்தால் பெறுவதற்கு உரிமையும் வாய்ப்பும் பெற்றிருந்தும், ஏழை வாழ்வை நடத்திய உத்தமர் உலவினார். மக்களின் மனம், என்னென்ன எண்ணியிருக்கும்; குண்டல மணிந்த குருமார்களையும், குறுந்தடி பிடித்து உலவிய உத்தமரையும், ஏக காலத்தில் கண்ட போது, 'கண்டறியாதன கண்டோம்" என்று களித்தனர். காதகனுக்குக் கண்ணிலேயும் கருத்திலேயும் கடு விஷம்- அவன் காணச் சகிக்கவில்லை இந்தக் காட்சியை - கொன்றான் உத்தமரை - அருளொழுகும் கண்ணுடையவர் என்று மக்கள் கூறக்கேட்டும், ஏசுவைச் சிலுவையில் அறைந்த வஞ்சகர் போல்.

அவரைக் கொன்றானே கொடியோன், அப்பொழுது அவர் மனதிலே இருந்து வந்த எண்ணங்கள் யாவை? என்பதை எண்ணும்போதுதான், நாம் எவ்வளவு பெரிய நஷ்டத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம் என்பது விளங்குகிறது. கல்லும், கட்டிடையும், காகிதக்குப்பையும் ஏற்றிக் கொண்டு சென்ற கலம் கவிழ்ந்தால் நஷ்டம் என்ன? முத்தும் பவளமும், முழுமதி போன்ற துகிலும் பிறவும் கொண்டு செல்லும் கலம் கடலிலே மூழ்கிவிட்டால்