பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

அறத்தின் குரல்

ஆச்சரியத்தோடு திகைத்துச் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். கண்ணபிரான் சிரித்துக் கொண்டே நெல்லி மரத்தின் கிளையைச் சுட்டிக் காட்டினான் என்ன விந்தை? அர்ச்சுனன் எந்த இடத்திலிருந்து அந்தக் கனியை வீழ்த்தினானோ அந்த இடத்தில் அதே காம்பில் அது பொருந்தித் தொங்கிக் கொண்டிருந்தது. தங்கள் துன்பத்தைப் போக்குவதற்கு வழி கூறியருளினதற்காகக் கண்ணபிரானுக்கு மனமார்ந்த நன்றியைச் செலுத்தினார்கள் பாண்டவர்கள். “என் உதவி ஒன்றும் இதில் கலந்துவிடவில்லை. உங்கள் தருமத்தாலும் சத்தியத்தாலும் உங்களை நீங்களே காத்துக் கொண்டீர்கள். வழி கூறிய பெருமை மட்டுமே எனக்கு உண்டு” என்றான் கண்ணன்.

8. மாண்டவர் மீண்டனர்

நெல்லிக்கனிச் சம்பவத்திற்குப் பின் பாண்டவர்கள் அஷ்டகோண முனிவருடைய வனத்தில் அதிக நாட்கள் தங்கியிருக்கவில்லை. அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ‘விஷ்ணு சித்த முனிவர்’ என்ற வேறோர் முனிவர் வசித்து வந்த காட்டை அடைந்து தங்கினர். இவர்கள் இது விஷ்ணு சித்த முனிவரின் வனத்தில் தங்கியிருப்பது எப்படியோ துரியோதனாதியர்களுக்குத் தெரிந்து விட்டது. இந்த வனத்திலிருந்து உயிரோடு மீளாமல் பாண்டவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்று அவர்கள் திட்டத்தோடு வேலை செய்தனர். பல வேள்விகளைச் செய்து நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றலுடையவரான காள மாமுனிவர் என்ற முனிவரைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தான் துரியோதனன், பல நாட்கள் இடைவிடாமல் அவரை வழிபாடு செய்து போற்றி உபசரித்தான். திடீரென்று தன்னை அழைத்து வந்து எதற்காக இவ்வளவு பெரிய உபசாரங்களை எல்லாம் செய்கிறான்? என்று விளங்காமல் திகைத்தார் முனிவர். துரியோதனன்