பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

அறத்தின் குரல்

அவள் நிச்சயம் அவனுக்கு வெற்றியை வாங்கிக் கொடுத்தே தீருவாள்” என்றார்.

சரியாக அதே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல வடக்கே இருந்து வந்த தூதுவர்கள் அரசனுக்கு முன் தோன்றி, “அரசே! பேடியின் சாரத்தியத்துடனே போருக்குச் சென்ற உத்தரகுமாரர் முழு அளவில் வெற்றி வாகை சூடித் திரும்பி வருகிறார்” என்று கூறினர். அரசனால் அந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. ஆனாலும் செய்தி என்னவோ உண்மையாகத்தான் இருந்தது.

“போகிறது. என் மகனும் ஒரு போரில் வெற்றியடைந்து விட்டானென்றால் அது ஆச்சரியத்துக்குரிய நிகழ்ச்சி தான்,” என்று மகிழ்ந்து மகனை ஆடம்பரமாக வரவேற்பதற்கு நகரத்தை அலங்கரிக்குமாறு ஆணையிட்டான் விராடன். “கங்கமுனிவரே! மகிழ்ச்சிக்குரிய செய்திகளே மேலும் மேலும் வந்து கொண்டிருக்கின்றன. மகனுடைய வெற்றித் தேர் இங்கு வந்து சேருகின்றவரை சிறிது நேரம் பொழுது போகச் சூதாடுவோம் வாருங்கள்” என்று விராடன் தருமனை அழைத்தான். தருமனுக்கோ, சூதாட்டம் என்ற சொல்லைக் கேட்டவுடனே ‘பகீர்’ என்றது. அவனுடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்த சொல் அல்லவா, அது? தருமன் முதலில் தயங்கினான். விராடன் வற்புறுத்தவே மறுக்க முடியாத நிலையில் அவனோடு சூதாடுவதற்கு அமர்ந்தான்.

ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே விராடன், வேறோரு பேச்சை இடையிலே கிளப்பி வைத்தான், “கங்கரே! உத்தரன் செய்யும் முதற்போரே இது தான். ஆனாலும் எவ்வளவு மகத்தான வெற்றியை அடைந்து விட்டான் பார்த்தீரா?”

“தவறு அரசே! வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது அந்தப் பேடியாகத்தான் இருக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை“ -தருமன் அழுத்தமாக இப்படிக் கூறினான். விராடனுக்குக் கோபம் வந்துவிட்டது.