பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

495

தேரோட்டியாக அமருவதற்கு இணங்கினான். “சல்லியா, பாண்டவர்களில் அர்ச்சுனன் வெற்றி மேல் வெற்றி அடைந்து கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? எல்லா வகைகளிலும் திறமை வாய்ந்தவனாகிய கண்ணன் அவனுக்குத் தேரோட்டியாக அமைந்திருப்பதுதான் காரணம். நீயும் அதுபோல் கர்ணனுடைய தேரோட்டியாக அமைந்து சிறப்பிக்க வேண்டும்” - என்று துரியோதனன் வேண்டினான்.

முதலில் துரியோதனனின் வேண்டுகோளுக்கு இணங்கி விட்ட சல்லியன் பின்பு ஆற அமரச் சிந்தித்தான். திடீரென்று என்ன நினைத்துக் கொண்டானோ! எப்படி மனம் மாறினானோ! கர்ணனுக்குத் தேரோட்டியாக இருப்பது தன் சுயமரியாதைக்கே அகெளரவம் போலத் தோன்றியது அவனுக்கு, சல்லியன் ஆத்திரங் கொண்டு கண்கள் சிவக்க வாய் துடிதுடிக்கச் சினத்தோடு துரியோதனனை எதிர்த்துப்பேச ஆரம்பித்தான்:-

“துரியோதனா! நீ என்னை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறாய் யாருக்கு யார் தேரோட்டுவது? எதற்காக ஓட்டுவது? மத்திரதேசத்து மன்னனாகிய என்னைப் போன்ற பேரரசன் ஒருவன் கேவலம் ஊர் பேர் தெரியாமல் உன்னை வந்து அண்டிய கர்ணனுக்குக் கீழ்ப் படிந்து தேரோட்ட வேண்டுமா? என்னுனடய வீரத்திற்குக் கர்ணனுடைய வீரத்தை இணை சொல்ல முடியுமா? வேண்டுமானால் ஒன்று செய்! பகைவர்களுடைய படையை இரு பிரிவாகப் பிரித்து என்னிடமும் கர்ணனிடமும் அவற்றை அழிக்கச் சொல்லிக் கட்டளையிடு! யார் முதலில் வெற்றிவாகை சூடுகிறார்கள் என்று பார்! நான் முதலில் மிக விரைவாக என் பங்குப் படைகளை அழித்து விட்டுப் பின் கர்ணன் பங்குப் படைகளையும் என் கையாலேயே அழித்துவிடுவேன். அத்தகைய பேராற்றலும் பெரும் வீரமும் உள்ள என்னைத் தேரோட்டி மகனாகிய கர்ணனுக்கு