பக்கம்:மணி பல்லவம் 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

423

ஒரு சொல்லுக்கும் ஆயிரம் சொற்களின் பொருளாற்றல் அமையும். அப்படி ஒரு சொல் தங்களில் யாரிடமிருந்து முதலில் பிறக்கப் போகிறதென்று இருவருமே ஒருவரையொருவர் எதிர்பார்த்துத் தயங்கிய நிலையில் நின்றார்கள். இருவர் நெஞ்சிலும் கொள்ளை கொள்ளையாக நிறையப் பேச வேண்டும் என்று நினைத்தும், ஒன்றுமே பேச வராததொரு நிலை.

அங்கே பூம்பொழிலில் மலர்ந்திருந்த மாலைப் பூக்களின் நறுமணமெல்லாம் ஒன்று சேர்ந்து உருப்பெற்றுக் கண்ணும், சிரிப்பும், முகமுமாய் எதிரே வந்து நிற்பதுபோல் முல்லை நின்றாள். ஒப்புக்குச் சிறிது நேரம் பேசிவிட்டுக் கதக்கண்ணன் அவர்கள் இருவரையும் தனிமையில் விட்டுச் சென்றிருந்தான். கதக்கண்ணன் இவ்வாறு தங்களை விட்டுச் சென்றிராவிட்டால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதென்று எண்ணினான் இளங்குமரன். முல்லையின் பார்வையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பராக்குப் பார்ப்பதுபோல் மேலே அண்ணாந்து நோக்கினான் அவன். சிறுசிறு வெண்மணல் திட்டுக்களைப் போல் சரிவு சரிவாய் வானில் மேக அடுக்குகள் மிகுந்தன. அனைத்தையும் அளாவி நிற்கும் அந்த எல்லையற்ற பெருவெளியிலே சலனத்தைக் காட்டி இயங்குவதுபோலக் கூட்டமாக வெண்ணிறப் பறவைகள் சில பறந்தன. பூம்பொழிலின் வாய்க்கால்களில் நீர்பாயும் ஒலியும், காற்றில் இலைகள் அசையும் ஒரே விதமான சலசலப்பும் தவிர எங்கும் ஒரு நிதானமாகப் பரவி அழகு சேர்க்கும் மாலைப் போதின் மயங்கிய சூழ்நிலை. அங்கே வானுயர வளர்ந்திருந்த நாகலிங்க மரத்தின் பூக்கள் தரையில் உதிர்ந்திருந்தன.

ஒரே நிலையில் கற்சிலை போல் நிற்க இயலாமல் முல்லை பாதங்களை இடம் பெயர்த்து நின்றதனால் சிலம்பொலி கிளர்ந்தது. அந்தச் சிலம்பொலியும் கலைக்கக் கூடாத மெளனத்தை அநாவசியமாகக் கலைத்து விட்டதற்காக அஞ்சுவதுபோல மெல்லத்தான் ஒலித்தது. சிலம்பிலிருந்து பிறந்த ஒலியும் ஒலியிலிருந்து பிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/129&oldid=1149929" இலிருந்து மீள்விக்கப்பட்டது