பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.65 பங்குகொண்டனர். சென்னையில் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் சிறந்த முறையில் இசைத் துறையில் வல்ல பல இசைவாணர்களும் கூடி இசை விழாக்கள் கொண்டாடி வந்தனர். ‘அண்ணாமலை மன்றம்' என்ற அழகிய கலை மாளிகையும் இப்பெருநகரில் அமைக்கப்பட்டது. இவற்றிலெல்லாம் டி.கே.சி. ஒவ்வொரு முறையில், உதவி வந்தனர். இவர்களது தமிழிசையியக்கம் இலக்கிய வளர்ச்சிக்குப் பயன்பட்டதுதான் நாம் இங்கே சிறப்பாகக் கூறத்தக்கது. பாரதி, இலக்கியத்தை இசையில் முளைத்தெழும்படி செய்து, இசையும் இலக்கியமும் ஒன்றையொன்று தழுவிச் செழித்தோங்கும்படி செய்தான். அவனுக்குப் பின் இம்முறை அத்தனை ஆதரவு பெறவில்லை. தமிழிசை இயக்கத்தின் பின், பண்டைக்காலத்துக் கீர்த்தனங்கள், பதங்கள் முதலியன அழகான முறையில் ஸ்வரப்படுத்தி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாரால் வெளியிடப்பட்டன. இப்பொழுது இசைப் பாடல்கள் புதிது புதிதாகவும் தோன்றத் தொடங்கின. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் உள்ளமுருக்கும் பல அருமையான கீதங்களை இயற்றியுள்ளார். இசை யிலக்கியம் செழிப்பதற்குத் தமிழிசை இயக்கம் மிகவும் உரமளித்து வந்தது. இவ்வகை இலக்கியச் சேவையிலும் டி.கே.சி. பேரார்வங்கொண்டு, இவ்விலக்கியத்தின் நயங்களை எடுத்துக் கூறி, அவற்றைத் தமிழ் மக்கள் உணரும்படி செய்தனர். கம்பனது இசைவன்மையையும் இடம் வாய்க்கும் பொழுதெல்லாம் டி.கே.சி. எடுத்துக் காட்டி வந்தனர். கவிதைக்கலையை அனுபவிக்கத் தொடங்கி, அதனோடு உடன்பிறந்த சிற்பம், இசை, நடனம் முதலிய மற்றைக்கலைகளையும் உணர்ந்து அனுபவித்து, இக்கலைகளெல்லாம் கம்பனை உணர்தற்குரிய படிக்கட்டுகள் என்றும் கம்பனைப் போன்ற கவி உலகத்தில, வேறு இல்லை என்றும் தாம் கண்ட உண்மைகளைச் சிறிதும் அச்சமின்றி எதிர்ப்புக்களை லவலேசமும் பொருட்படுத்தாது தமிழ் நாடெங்கும் உபதேசித்தனர். பல பெரியோர்களும் இவரது சிஷ்ய வர்க்கத்தில் தாமாகவே இடம் பெற்று டி.கே.சி.யின் சொல்லமிர்தம் பருகி இன்பத்தில் திளைத்தனர். எளிய சாதாரணப் பேச்சு நடையில் குதுகலித்து வரும் தமது சொல்லாற்றலால் விளையும் நன்மையைப்போல் தமது எழுத்துக்களால் உண்டாக்கமாட்டாது என்று டி.கே சி. உறுதியாய் நம்பினர். இதனால் அவர்கள் வெகுகாலமாக நூல்கள், கட்டுரைகள் முதலியவை எழுதாதபடியே இருந்தார்கள். அப்பு:ஸ்வாமி ஐயர் முதலிய நண்பர்களின் தூண்டுதலின் பேரில்தான் எழுத முன்வந்தார்கள்.