பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனை விளக்கு

17

தருவதாக இருக்கக் கூடாதா? கைப்புக்கு இடமான வேம்பு; அதுகூட இலை சிறுத்து அடி மரம் பொரிந்து நிற்கிறது. அதன் மேலே பிணத்தை விருந்தாக அருந்தும் பருந்து. கீழே வில்லேருழவரின் கல்லாச் சிறார்!

வழிப்பறி செய்கிற வில்லேருழவர்கள் சேர்ந்து வாழும் சின்னச் சின்ன ஊர்கள் வழி முழுவதும் இருக்கின்றன. வெப்பம் நிறைந்த முற்றங்களையுடைய ஊர்கள் அவை. புறத்திலே மாத்திரம் வெப்பம் அல்ல; உள்ளத்தே கூட வெப்பம் கொண்ட மக்கள் வாழும் இடங்கள் அவை. சுடுகாட்டுக்கும் அவற்றிற்கும் வேறுபாடு இல்லை.

வ்வளவு கொடுமை நிறைந்த பாலை நில வழி காதலனுடைய அகக் கண்ணிலே வந்து நின்றது. "நாமா அந்த நிலத்தைக் கடந்து போனோம்!” என்று அவனே மலைத்தான். நினைத்தாலும் நடுக்கந் தரும் இடம் அல்லவா அது? அந்த இடத்தின் வழியாக மறுபடியும் போய்ப் பொருள் ஈட்ட வேண்டுமென்று இந்த நெஞ்சு நினைக்கிறதே! என்ன பைத்தியக்காரத்தனம்!

சென்ற தடவை அவன் போனபோது அந்தப் பாலை வனத்தின் கொடுமையை நேரே கண்டிருக்கிறான். அதன் வழியே செல்லும்போது உண்டான துன்பம் கிடக்கட்டும். அப்போது அவன் உள்ளத்தே எழுந்த ஒரு பெரிய போராட்டத்தை ஒருவாறு வென்று மேலே சென்றான். அந்தச் செய்தியும் இப்போது அவனுக்கு நினைவுக்கு வருகிறது.

வில்லேர் உழவர் வாழும் வெவ்விய முன் இடங்களையுடைய சிறிய ஊர்கள் இடையிடையே இருக்கும் சுரத்-

மனை-2