தமிழகக் கலை வரலாறு : இசை
-
ஓவியம் - அணிகலன்கள்
205
அவர்கள், ஆகாயத்திலே வெண்ணிலா யிருப்பதையும், குளத்திலே ஆம்பல் மலர்ந்து தாமரை கூம்புவதையும், அழகாகக் காட்டமுடியும். னால், “எங்குளார் உலகில் யார்க்கும் ஒருவராய் இனிய நீரார்” என்னும் உண்மையை எவ்வாறு காட்டமுடியும்? இவ்வாறு காட்டுவது இலக்கியக் கலைஞராலேதான் முடியும்.
தேவாரம்
திருநாவுக்கரசு சுவாமிகள், கடவுளுடைய கருணை (திருவடி நிழல்) எதைப்போல இருந்தது என்பதை விளக்குகிறார், இனிய இளவேனிற்காலம்; சூரியன் மறைந்த மாலை நேரம்; வானத்திலே வெண்ணிலா தோன்றி பால்போல நிலவைப் பொழிகிறது. இந்தக் குளிர்ந்த நேரத்தில் தாமரைக் குளத்தின் அருகிலே அமர்ந்திருக் கிறோம். தென்றல் காற்றுத் தவழ்ந்துவந்து மெல்லென வீசுகிறது. பசுமையான இலைகளுக்கிடையே பூத்துள்ள செந்தாமரை, வெண்டாமரை மலர்களின்மேல் ரீங்காரம் செய்த வண்ணம் வண்டுகள் பறந்து விளையாடுகின்றன. வீணை வாசிக்கும் இனிய இசை, சுவையுள்ள அமுதம்போல செவியில் புகுந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
இளவேனில், மாலைநேரம், தாமரைக்குளம், தென்றல் காற்று, நிலா வெளிச்சம், வீணை நாதம் இவ்வளவும் ஒன்று சேர்ந்தால் எப்படியிருக்குமோ அதுபோல் இறைவனுடைய இன்னருள் இருந்தது என்று கூறிச் சிறு பாடலில் சொல்லோவியம் அமைத்துக் காட்டுகிறார் நாவுக்கரசர்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.
என்பது அப்பாடல்.
இவ்வாறு, இலக்கியக் கலையில் அமைத்துக்காட்டப் பட்ட க்கருத்தைச் சிற்பக் கலைஞனோ ஓவியப் புலவனோ தமது சிற்ப ஓவியக் கலைகளில் அமைத்துக்காட்ட இயலாது. இலக்கியக் கலைஞனால்தான் அமைத்துக் காட்ட முடியும்.