44
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14
3-ஆம் செய்யுள். கூடல் மன்னவன் என்பது மதுரை நகரின் மன்னவன் என்பது பொருள் அன்று. இந்தக் கூடல், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள கூடலூர் ஆகும்.
4-ஆம் செய்யுள். கழுது - பேய்.
5-ஆம் செய்யுள். கைம்மலை வெள்ளக் கடற்படைப் பல்லவன் என்பது, யானைப் படையையும் கடற்படையையும் உடையவன் என்பது.
விடுகாதழகிய பெருமாள்
இடம் : வடஆர்காடு மாவட்டம், போளூருக்கு அடுத்த திருமலை. இவ்வூர் மலைமேலுள்ள சிகாநாதசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள குகைவாயிலின் வெளிப்புறச் சுவரில் உள்ளச் செய்யுள்.
பதிப்பு : எண் 75. தென் இந்திய சாசனங்கள், முதல் தொகுதி (No. 75. S.I.I. Vol. I.)
விளக்கம் : சேர அரசர் குலத்தவனாகிய எழினி என்பவன், முன் ஒருகாலத்தில் இந்த மலையின்மேலே அமைத்த இயக்கன் இயக்கி உருவங்கள் பிற்காலத்தில் பழுதடைந்து போக, அக்குலத்தில் தோன்றிய அதிகமான் விடுகாதழகிய பெருமாள் என்னும் அரசன் அவ்வுருவங்களைப் பழுது தீர்த்துப் புதுப்பித்ததோடு வெண்கல மணியொன்றைத் தானம் செய்ததையும், கடப்பேரியிலிருந்து ஒரு கால்வாயை வெட்டியமைத்ததையும் இச்செய்யுள் கூறுகிறது. இந்தச் செய்யுளுக்கு மேலே ஒரு ஒரு வடமொழிச் செய்யுளும் எழுதப் பட்டிருக்கிறது.
சாசனச் செய்யுள்
சேரவம்சத்து அதிகைமான் எழினி செய்த தர்ம யக்ஷரையும் யக்ஷியாரையும் எழுந்தருளுவித்து எறிமணியும் இட்டுக் கடப்பேரிக் காலுங் கண்டு குடுத்தான்.