270
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15
தொல்., பொருள்., மரபு.. “வினையி னீங்கி விளங்கியவறிவன், முனைவன் கண்டது முதனூலாகும்" என்னும் சூத்திரத்திற்கு உரை யெழுதிய பேராசிரியர், பல்காப்பியப் புறனடையிலிருந்து ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார். அது வருமாறு:
“கூறிய குன்றினு முதனூல் கூட்டித் தோமின் றுணர்த் றொல்காப் பியன்றன் ஆணையின் றமிழறிந் தோர்க்குக் கடனே.'
இது பல்காப்பியப் புறனடைச் சூத்திரம்.”
இதனால், அவிநயம் என்னும் இலக்கண நூலுக்கு நாலடி நாற்பது என்னும் அவிநயப் புறனடை நூல் இருந்ததுபோலவும் யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலுக்கு யாப்பருங்கலக் காரிகை என்னும் புறனடை நூல் ஒன்று இருப்பது போலவும், பல்காப்பியம் என்னும் இலக்கண நூலுக்கு பல்காப்பியப் புறனடை என்னும் ஒரு புறனடை நூல் இருந்தது என்பது தெரிகிறது.
இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் கிடைக்கவில்லை.
29. பல்காயம்
பல்காயனார் இயற்றிய பல்காயம் என்னும் நூல், யாப்பிலக்கணத்தை உணர்த்துவது. தொல்காப்பியர் விரித்துரைத்தவற்றைப் பல்காயனார் பகுத்துரைத்தார் என்று கீழ்காணும் வெண்பா கூறுகிறது:
"தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார் பலகாய னார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக்
கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தந் நூலுட் டொகுத்து.
இந்த வெண்பா, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் (எழுத்தோத்து, 1ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டியது. மேலும், யாப்பருங்கல விருத்தி யுரைகாரர், (சீரோத்து, 1ஆம் சூத்திர உரையில்) இவ்வாறு கூறுகிறார்:
"நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நாலசையும் நாலசைப் பொதுச்சீரும் வேண்டினார் பல்காயனார் முதலிய ஒருசாராசிரியர்.”