210
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16
சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணியை 1898-இல் பதிப்பித்தார். மகாலிங்கையர் இயற்றிய இலக்கணச் சுருக்கத்தையும் அதே ண்டில் அச்சிற் பதிப்பித்தார். உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத் தமிழை 1901-ஆம் ஆண்டு பதிப்பித்தார். புகழேந்தியின் நளவெண்பாவை 1899-இல் பதிப்பித்தார். தனிப்பாசுரத் தொகையை 1901-இல் பதிப்பித்தார்.
கதிரைவேற் பிள்ளை (1871-1907)
யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி இவரது ஊர். யாழ்ப்பாணத்து நல்லூர் மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை, நல்லூர் சதாசிவப் பிள்ளை முதலியவர்களிடம் தமிழ் பயின்றார். காசிவாசி செந்தினாதை யரால் ‘மாயாவாத தும்சகோளரி” என்னும் பட்டம் பெற்றார். ஆரணி சமஸ்தானத்தில் வித்துவானாக இருந்தார். ஆரணி சமஸ்தானத் தலைவரால், "அத்துவித சித்தாந்த மதோத்தாரணர்” என்னும் பெயர் சூட்டப்பட்டார். 1907-இல் சதாவதானம் செய்தார். புராணப் பிரசங்கம் செய்வதிலும், சொற்பொழிவு செய்வதிலும் வல்லவர்.
இவர் இயற்றிய நூல்கள்: மருட்பா மறுப்பு, கருவூர் மான்மியம், தமிழ்ப் பேரகராதி, புத்தமத கண்டனம், கதிர்காமக் கலம்பகம். அதிவீரராம பாண்டியன் இயற்றிய கூர்ம புராணத்துக்கும் சிவராத்திரி புராணத்துக்கும் உரை எழுதினார்.
வித்துவான் சிவானந்தையர் (1873-1916)
யாழ்ப்பாணத்துத் தெல்லிப்பழைக்கு அருகில் உள்ள பன்னாலை இவருடைய ஊர். ஏழாலை வித்தியாசாலையில் ஆசிரியராக இருந்த சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் கல்வி பயின்றார். சிதம்பரம் பச்சையப்ப முதலியார் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்தார். இவருக்கு, முன்தலையில் உயரமான புடைப்பு இருந்தபடியால் மிடாத்தலையர் என்று கூறப்பட்டார்.
வடமொழியில் உள்ள தருக்க சங்கிரகம் என்னும் நூலின் உரைகளாகிய நியாயபோதினி, பதகிருத்தியம், அன்னம்பட்டீயம், நீலகண்டீயம் என்னும் உரைகளைத் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டார். புலியூர்ப்புராணம் புலியூர் அந்தாதி என்னும் நூல்களை இயற்றினார்.