உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


“எழிற் சந்த விருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே” என்றும் வைணவர் இவரைப் போற்றுகிறார்கள்.

இந்த ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

முதலாழ்வார், திருமழிசையாழ்வார்காலஆராய்ச்சி.

I

பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் இம்மூவரும் முதலாழ்வார் எனப்படுவர். இம்மூவரும் ஒரேகாலத்தில் இருந்தவர்கள். இவர்கள் காலத்தில் இருந்த திருமழிசையாழ்வார் இவர்களுக்கு இளையவர். ஆனால், நால்வரும், ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்பதற்கு இவர்களின் வரலாறு சான்றுகூறுகிறது. வைணவ அடியார்களான இவர்கள், சைவ அடியார்களான நாவுக்கரசர், ஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், முருகநாயனார் முதலிய சைவநாயன்மார்கள் வாழ்ந்திருந்த அதே காலத்தில், அஃதாவது மாமல்லன் நரசிம்மன் காலத்தில் இருந்தவர்கள். இந்த ஆழ்வார்களின் காலத்தை எளிதாகக்கண்டு இவர்கள் நூல்களிலே சான்றுகள் இல்லை. ஆனால், பூதத்தாழ்வார் தமது செய்யுளில் மாமல்லபுரத்தைக் குறிப்பிடுகிறார். அந்தக் குறிப்பைக்கொண்டு, இவரும் இவருடனிருந்த மற்ற ஆழ்வார்களும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், மாமல்லன் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில், இருந்தவர்கள் என்று தீர்மானிக்கலாம். இதனை ஆராய்வோம்.

பூதத்தாழ்வார் பாடிய திருவந்தாதியில்,

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
தமருள்ளுந் தண்பொருப்பு வேலை - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்.

என்னும் செய்யுளைப் பாடியுள்ளார்.1

இச்செய்யுளில் மாமல்லபுரத்தை மாமல்லை என்று கூறுகிறார். பூதத்தாழ்வார் பிறந்ததும் மாமல்லபுரந்தான். மாமல்லபுரம் இப்போது மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிறது.