உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள் 21

அதன்படி, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டு களையும் மிகுந்த உழைப்புடன் உழைப்புடன் சேகரித்து சேகரித்து வகைப்படுத்தி வாசகங்களைப் படித்துக் காட்டுகின்றார்; ஏறத்தாழ 18 ஊர்களில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகளை இதில் சேர்த்திருக்கிறார். கடைசியில், தற்போது பத்திரிகைகளில் அதிகமாகப் பேசப்படும் அதிகமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டும் ஆராயப்படுகிறது. இவ் வாராய்ச்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தமிழகத்தின் கடைச் சங்ககாலம் கி.மு. 3லிருந்து கி.பி. 3வரை என்பதும் உறுதியாகும்; இஃது இந்திய வரலாற்றுக்கும் ஒளி சேர்க்கும்.

தமிழகத்தில் கடைச் சங்க காலத்தில் வழங்கிய எழுத்து முறை (Script) பற்றிஅறிவதற்குக்கூடப் பிராமிக் கல்வெட்டுகள் துணை நிற்கின்றன. இந்திய தேசத்தில் அசோகன் காலத்திலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை பிராமி (Brahmi) எழுத்து முறையே வழக்கில் இருந்தது என்கிற கொள்கையை ஆய்வதற்கும் இவை ஒத்தாசை புரிகின்றன. ஆனால், மலைக் குகை ஜைனக் கல்வெட்டுகளில் கையாளப்பட்ட வரிவடிவத்தை வைத்துக்கொண்டே, தமிழ் மக்கள் தங்கள் மொழியைப் பிராமி எழுத்திலேயே எழுதினர் என்று சொல்ல முடியுமா என்கிற கேள்வி இங்கு எழுகிறது. இதற்கு மயிலை சீனி. அவர்கள் ஒரு பதில் கூறினார்.

'தற்போது, தமிழகத்துக் குகைக் கல்வெட்டுகளில் பிராமி எழுத்துத் தான் கிடைக்கிறது என்பது உண்மைதான்; ஆனால், அப் பிராமியில் வடபிராமிக்கும் தென்பிராமிக்கும் வேறுபாடு இருக்கிறது; வட பிராமியில் ந, ழ,ள, ற, ஃபோன்ற எழுத்துகள் காணப்படவில்லை; தென் பிராமியில் இவற்றில் சில காணப்படுகின்றன. அப்படியானால், அவ் வெழுத்துக்கள் வேறு ஏதோ உள்நாட்டு வரிவடிவில் (Local Script) இருந்த எழுத்துகளாக இருக்கலாம் அல்லவா? அந்த வரிவடிவு ஏட்டுச்சுவடிகள் மூலம் நமக்குக் கிடைக்க முடியாதே? ஆனால், அக் காலத்திய அஃதாவது, கடைச் சங்க காலத்திய நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் கிடைத்தால், அவற்றில் உள்ள எழுத்தைக் கொண்டு பண்டைக் காலத்தமிழ் வரிவடிவைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமே, என்று அவர் கூறினார். ஆனால், சங்க கால நடுகல் நமக்குக் கிட்ட வேண்டுமே? இதுபோன்ற பல சிந்தனைகள் இந் நூலைப் படிப்பதன் மூலம் நமக்குக் கிடைக்கும்.