உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

உத்தேசம் கி.பி. 350-ல் ஆகும். அவன் மகன் காலத்தில் களபரர் என்னும் கலியரசர் வந்து சேர சோழ பாண்டிய நாடுகளைப் பிடித்து அரசாண்டனர். அவ்வாறு அரசாண்ட களபர அரசர்களில் அச்சுத விக்கந்தன் என்பவன் கி.பி. 450-இல் சோழநாட்டை யரசாண்டான். ஆகவே சோழன் செங்கணான் கி.பி. 350-இல் இருந்தவனாதல் வேண்டும். அக்காலத்திலேயே, அய்யங்கார் கருத்துப்படி பொய்கை யாழ்வாரும் மற்ற ஆழ்வார்களும் இருந்தவராதல் வேண்டும். ஆனால், மேலேகாட்டியபடி முதல் நந்திவர்மன் (கி.பி.534) சிம்மவிஷ்ணு (கி.பி.590) போன்ற பல்லவ அரசர் ஆட்சியில் பூதத்தாழ்வார் முதலியவர்கள் இருந்தார்கள் என்கிறார். இவ்வாறு உறுதியில்லாமலும் உறுதியான சான்றுகள் இல்லாமலும் கூறுகிற இவர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் காலத்தை நீட்டுகிறார். ஏறக் குறைய 250 ஆண்டுகளை இவ்வாழ்வார்களின் ஆயுள் காலமாகக் காட்டுகிறார்.

ஆழ்வார்கள் யோகிகளாய்ப் பல நூற்றாண்டுகள் வாழ்ந்திருந் தார்கள் என்பதைச் சமய நம்பிக்கையும் பக்தியும் உள்ளவர்கள் நம்பட்டும். ஆனால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இவ்வளவு நீண்டகாலத்தை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஒப்புக் கொள்வதும் தவறு. இவ்வாழ்வார்கள் நால்வரும் பொதுவாக நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர்கள் என்றுகொண்டு உச்தேசம் கி.பி.600 முதல் 700 வரையில் இருந்தவர்கள் என்று கருதலாம். மாமல்லன் நரசிம்மவர்மன் ஆட்சியும் இக் காலத்தில் அடங்குகிறது. சைவ அடியார்களான திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் காலமும் இதில் அடங்குகிறது. பக்தி யியக்கம் சிறந்திருந்த காலமும் இதுவே.

திவான்பகதூர் சுவாமிக்கண்ணுப் பிள்ளையவர்கள், வானநூல் முறைப்படி கணித்து ஆழ்வார்கள் காலத்தை முடிவு கூறுகிறார். பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார் மூவரும் கி.பி. 719-இல் பிறந்தவர்கள் என்றும், திருமழிசையாழ்வார் கி.பி. 720 இல் (ஜனவரி மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை) பிறந்தவர் என்றும் கூறுகிறார்.1 இது ஒரு நூற்றாண்டு பின்தள்ளிப் போகிறது. அன்றியும் ஏனைய சரித்திர ஆதாரங்களுக்கு ஒத்திருக்கவில்லை. ஆகவே இந்த முடிவையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.