உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

என்று பெயர்வழங்கியதாகத் தெரிகிறது.இலங்கையிலுள்ளதமிழர்கள்“காய்கறி’ உணவை இப்போதும் ஆரத உணவு என்று வழங்கி வருகின்றனராம்3. ஆரத உணவு என்பது ஆருகத உணவு என்பதன் திரிபு.

தீபாவலி :

இது சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கியிருந்தபோது, அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆன படியினாலே, சொற் பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிவிட்டனர். வர்த்தமான மகாவீரரும், தாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்தபடியே வீடுபேறடைந்தார். பொழுதுவிடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது, மகாவீரர் வீடுபேறடைந்திருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து, உலகத்திற்கு ஞானவொளியாகத் திகழ்ந்த மகா வீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும்பொருட்டு, அவர் வீடு பெற்ற நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழாக் கொண்டாடும் படி ஏற்பாடு செய்தான். அதுமுதல் இந்த விழா தீபாவலி என்னும் பெயரால் கொண்டாடப்படுகிறது. (தீபம் = விளக்கு. ஆவலி = வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறடைந்தபடியால், தீபாவலி விடியற் காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடியப் பின்னர்த் திருவிளக்கேற்றித் தீபாவலிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ?

சமணசமயம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருவாரியாக இந்துமதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள், தாம் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவலியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள், இதைத் தாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துகொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்தநாளைக் கொண்டாடுவதுதான் தீபாவலிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று.