உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

47

உணவு கொடுத்துதவ அறச்சாலைகளை அரசர் செல்வந்தர் முதலானோர் உதவி பெற்று நிறுவினார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த கோவலன் மகள் மணிமேகலை என்பவள், பௌத்த மதம் புகுந்து துறவுபூண்டு, புகார்ப்பட்டினத்துக்கு அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தைச் சேர்ந்த உலக அறவி என்னும் அம் பலத்தில் இருந்த குருடர், முடவர், பசிநோய் கொண்ட வறியவர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தியை மணிமேகலை 17ஆம் காதையினால் அறிகிறோம். அன்றியும், மணிமேகலை சிறைக்கோட்டம் சென்று சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்து உண்பிக்க, அதனை அறிந்த சோழ அரசன் அவளை அழைத்து, நான் உனக்குச் செய்யவேண்டுவது என்ன என்று கேட்க, அவள், சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்க வேண்டும் என்று கூற, அரசனும் அவ்வாறே சிறைக் கோட்டத்தை அறக்கோட்ட மாக்கிக் கொடுத்தான் என்று மணிமேகலை 19-ஆம் காதையினால் அறிகிறோம். அவ்வறக் கோட்டம்,

“அரசன் ஆணையின் ஆயிழை அருளால், நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம், தீப்பிறப் புழந்தோர் செய்வினைப் பயத்தால் யாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப்,

பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும், அருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும் அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும் கட்டுடைச் செல்வம் காப்புடைத் தாக

ஆயிற்று என்று மணிமேகலை 20-ஆம் காதையினால் அறிகிறோம். இவ்வாறு நாட்டுமக்களுக்கு நலம் புரிந்து கொண்டே பௌத்த மதத்தின் கொள்கைகளையும் போதித்து வந்தபடியால், இந்த மதம் தமிழ் நாட்டிலும் நன்கு பரவி வளர்ந்தது.

இவையன்றியும், இந்த மதம் மேல்சாதி கீழ்ச்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும் எக்குடியிற் பிறந்தோராயினும், அன்னவர் கல்வி அறிவுகளிற் சிறந்தோராய்த் தம் மதக் கொள்கைப்படி ஒழுகுவாராயின், அவரையுந் தங் குருவாகக் கொள்ளும் விரிந்த மனப்பான்மை கொண்டிருந்தபடியினாலும், அக்காலத்தில் சாதிப் பாகுபாடற்றிருந்த தமிழர் இந்த மதத்தை