உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

5-ஆம் நூற்றாண்டில் பௌத்த விகாரையும் பெளத்தர்களும் இருந்தனர் என்று அறிகிறோம்.

நாகைப்பட்டினம்:

இது சோழநாட்டைச் சேர்ந்த துறைமுகப் பட்டினம். இது தொன்றுதொட்டு பௌத்தர்களின் புண்ணிய நகரமாக இருந்துவந்தது. உற்றவர்க் குறுப்பறுத் தெரியின்க ணுய்த்தலை யன்ன

தீமை செய்வோர்க்கு மொத்த மனத்ததாய்,

நற்றவர்க் கிடமாகின்றது நாகையே'

என்று பௌத்தர்கள் இந்நகரைப் புகழ்ந்து கூறுவர்.

இங்கு அசோக சக்கரவர்த்தியார் கட்டிய பதரதிட்ட விகாரை யென்று ஒரு விகாரை இருந்தது. இந்த விகாரையில் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசாரிய தர்மபாலர் தங்கியிருந்து, நெட்டி பகரணட்டகதா என்னும் உரை நூலைப் பாலி மொழியில் எழுதினார். நாகைப்பட்டினம் நாகநகரம் என்றும் கூறப்படுகிறது. இங்கிருந்த நாகாநன விகாரையில் மகா காசபதேரர் தங்கிருந்தார்.

கி.பி. 720ஆம் ஆண்டில் நரசிம்ம போத்த வர்மன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில், இந்தப் பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயில் கட்டப்பட்டது. வர்த்தகத்தின் பொருட்டுச் சீன நாட்டிலிருந்து நாகைக்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன அரசன் விருப்பப்படி அது கட்டப்பட்டது. பிற்காலத்தில் அக்கோயிலைச் ‘சீனா கோயில்' என்று வழங்கியதாகத் தெரிகின்றது. வெனிஸ் தேசத்திலிருந்து சீனாவுக்கு யாத்திரை சென்ற மார்க்கோபோலோ என்பவர் நாகைப்பட்டினத்தில் ‘சீனா கோயில்' என்னும் பெயருள்ள ஒரு கோயில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்.

கி.பி. எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த திரு மங்கையாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த விகாரையொன்றில் முழுதும் பொன்னால் அமைக்கப்பட்டிருந்த புத்த உருவச்சிலையைக் கவர்ந்து கொண்டுபோய், அப்பொன்னைக் கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான திருத்தொண்டுகளைச் செய்தார் என்பது குருபரம்பரப் பிரபாவம் முதலிய வைணவ நூல்களினால் தெரியவருகின்றது.