உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

163

தீயவர்களோடு நேசம் செய்யாதே; அற்பர்களோடு இணங்காதே. நேர்மையுள்ள நல்லவர்களோடு நட்புக் கொள். மேன்மக்களோடு சேர்ந்து பழகு.

பயனற்ற ஆயிரம் செய்யுள்களைப் படிப்பதைவிட மன அமைதியைத் தருகிற ஒரே ஒரு செய்யுளைப் படிப்பது மிக மேலானது.

மன அமைதியைத் தருகிற ஒரு செய்யுளானது பயனற்ற ஆயிரம் செய்யுள்களைவிட மிக மேலானது.

முயற்சி இல்லாமல் சோம்பலோடு இருக்கிற ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையைவிட, ஆற்றலோடும் ஊக்கத்தோடும் முயற்சி செய்கிற ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கை மேன்மை யுடையது.

உத்தம தர்மத்தை அறிந்த ஒருவருடைய ஒரு நாளைய வாழ்க்கையானது, அவ்வுத்தம தர்மத்தைக் காணாத ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையைவிட மேலானது.

சாவு வராமல் தடுத்துக்கொள்ள இவ்வுலகத்திலே ஆகாயத்தி லாயினும், கடலின் நடுவிலாயினும், மலைக் குகைகளிலாயினும் ஒளிய இடம் இல்லை.

யாரிடத்திலும் கடுஞ்சொற்களைப் பேசாதே. கடுஞ்சொல் பேசியவர் கடுஞ்சொற்களால் தாக்கப்படுவர். சுடுசொற்கள் மெய் யாகவே துன்பந்தருகின்றன. அடிக்கு அடி திருப்பி அடிக்கப்படும்.

கல்வி, அறிவு இல்லாத ஆள் எருதைப் போன்று வளர்கிறான். அவனுடைய சதை வளர்கிறது; அவன் அறிவு வளரவில்லை.

இளமையிலே தூய வாழ்க்கையை மேற்கொள்ளாதவரும் செல்வத்தைத் தேடிக் கொள்ளாதவருந் தமது முதுமைக்காலத்தில், மீனில்லாத குளத்தில் இரை தேடிக்காத்திருக்கும் கிழக் கொக்கைப் போல, சோர்ந்து அழிவார்கள்.

ஒருவர் முதலில் தம்மை நல்வழியில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிறகுதான் மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். இத்தகையவர் நிந்திக்கப்பட மாட்டார்கள்.