உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

விம்பசாரன் வேண்டுகோள்

சேவகர், அரண்மனைக்குச் சென்று கௌதமத் துறவி பண்டவ மலை யடியில் தங்கியிருப்பதை விம்பசார அரசனுக்குத் தெரிவித்தார்கள். விம்பசாரன், துறவியைக் காணப் பண்டவ மலைக்கு வந்தான். வந்து, கௌதமத் துறவியைக் கண்டு வியப்படைந்தான்.. பின்னர் அரசன் கௌதமரை நோக்கி இவ்வாறு கூறினான். “தாங்கள் இளவயதுள்ளவர்; இந்த வயதில் துறவு எதற்காக? இந்த அங்க மகத தேசங்களில் எதை யேனும் ஒன்றைத் தங்களுக்குக் கொடுக்கச் சம்மதிக்கிறேன், தாங்கள் அரசராக இருந்து நாட்டுக்கு நன்மை செய்யுங்கள். தங்களுடைய குலம் கோத்திரங்கள் யாவை?”

விம்பசார அரசன் கூறியதைக் கேட்ட கௌதமர், கபிலவத்து நகரத்தின் பக்கமாகத் தமது கையை நீட்டிக் காட்டி “அதோ அந்தக் கபிலவத்து நகரத்திலே சாக்கிய குலத்திலே பிறந்தவன் நான். அந்த நகரத்து அரசரான சுத்தோதனர் என்னுடைய தந்தை. மகாராஜனே! நானும் அரச குமாரனாக இருந்தவன். அரச போகங்களும் இன்ப சுகங்களும் இனி எனக்கு வேண்டா. ஆகையினாலே தாங்கள் அளிப்பதாகக் கூறும் அங்க நாடும் மகத நாடும் எனக்கு வேண்டா. மெய்ஞ்ஞானத்தை யடையும் பொருட்டு உலக வாழ்க்கையைத் துறந்து துறவறத்தை மேற்கொண்டேன்" என்று கூறினார்.

கௌதமர் கூறியதைக் கேட்ட விம்பசார அரசன் தாம் நேரில் பாராமலே தமது மனத்தில் நட்புரிமை கொண்டிருந்த சித்தார்த்த குமாரன் இவர் என்பதையறிந்து, பெரிதும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து, தமது நாட்டில் சரி பகுதியை அவருக்குத் தருவதாகவும் அதனை அரசாளவேண்டும் என்றும் கூறி, மீண்டும் மீண்டும் வேண்டினான். கௌதமர் அரசனது வேண்டுகோளை உறுதியாகவும் வன்மையாகவும் மறுத்தார். கடைசியாக விம்பசார அரசன் இவ்வாறு கூறினான்: “சுத்தோதன அரசருடைய சித்தார்த்த குமாரன் நான்கு நிமித்தங்களைக் கண்டு துறவு பூண்டு புத்தராகப் போகிறார் என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். தாங்கள் புத்த பதவி யடையப்போவது உறுதி. தாங்கள் புத்தரான பிறகு, என்னுடைய நாட்டிற்கு எழுந்தருளி அறநெறியைப் போதித்தருள வேண்டும்." இவ்வாறு கூறி விம்பசாரன் கௌதமரை வணக்கமாக வேண்டிக் கொண்டான். கௌதமர் அவ்வாறே வருவதாக வாக்களித்தார். கௌதமரை வணங்கி அரசன் அரண்மனைக்குச் சென்றான்.