உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

“அமரத்தன்மை பெறுவதற்காக உடம்பை வருத்தித் துன்பப்படுத்திக் கடுந்தபசு செய்வது எப்படியிருக்கிறது என்றால், கடலிலே செல்லும் கப்பலைக் கொண்டுவந்து மணல் நிறைந்த பாலைவனத்தில் வைத்துத் துடுப்பு கொண்டு துழாவி ஓட்டுவதுபோல இருக்கிறது. அப்படிச் செய்வது வீண் முயற்சி என்றறிந்து, மார்க்க ஞானத்துக்கு நற்பாதையாகவுள்ள சீல சமாதி பிரஞ்ஞை என்கிற மூன்று விதமான குணங்களை மேற் கொண்டு நடந்து தூய்மையடைந்தேன். மாரனே! உன்னை நான் வென்றேன்" என்று கூறினார். அப்போது மாரன், பகவன் புத்தர் தன்னைத் தெரிந்து கொண்டார் என்பதை அறிந்து, வெட்கமும் வருத்தமும் அடைந்து அவ்விடத்திலிருந்து மறைந்துபோனான்.

இரவு வேளையில் பகவன் புத்தர் அஜபாலன் என்னும் ஆல் மரத்தண்டை உலாவிக்கொண்டிருந்தார். பிறகு அருகிலிருந்த ஒரு பாறைக் கல்லின்மேல் அமர்ந்தார். அப்போது மாரன் அவரை அச் சுறுத்த எண்ணினான். மிகப் பெரியதோர் யானையின் உருவம் கொண்டு அச்சந் தரத்தக்க முறையில் அவ்விடம் வந்தான். அந்த யானையின் தலை பாறை போன்று பெரியதாக இருந்தது. தந்தங்கள் மிக வெண்மை யாக வெள்ளி போன்றிருந்தன. தும்பிக்கை நீண்டு ஏர்க்கால்போல் இருந்தது. இவ்வாறு வந்தவன் மாரன் என்பதைப் பகவன் புத்தர் அறிந்துகொண்டார்.

"நீண்டகாலமாக என்னை அச்சுறுத்துவதற்காக இனிய நல்ல உருக்களையும் அச்சந் தரும் கொடிய உருவங்களையும் தாங்கிக் கொண்டு என்னிடம் வருகிறாய். இது மிக இழிவான செயல். மாரனே, உன்னுடைய முயற்சிகள் வீணாயின” என்று உரைத்தார். அப்போதும் தன்னைப் புத்தர் அறிந்து கொண்டதை உணர்ந்த மாரன் வெட்கமும் துக்கமும் கொண்டு மறைந்து போனான்.

மற்றொருமுறை மாரன், பகவன் புத்தரை அச்சப்படுத்த எண்ணி, ஒரு நள்ளிரவிலே வெவ்வேறு உருவங்களைக் காட்டினான். அப்போது பகவன் புத்தர், “மாரனே! மனம் வாக்குக் காயங்களை உறுதியுள்ள அரணாக அமைத்துக் கொண்ட முனிவர்கள் உன்னுடைய செயலுக்கு அஞ்சித் தோல்வியுற மாட்டார்கள்.” என்று கூறினார். உடனே மாரன் முன்போலவே அவ் விடத்தைவிட்டுப் போய்விட்டான்.