பக்கம்:மயில்விழி மான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மயில்விழி மான்

தொண்டையின் பலம் முழுவதையும் உபயோகித்துச் சத்தம் போட்டுப் பார்த்தேன். கேள்விமுறை ஒன்றுமில்லை. தொண்டை வறண்டது தான் மிச்சமாயிற்று. அதிலிருந்து தாகமாயிருக்கிறது என்ற நினைவு வந்தது. வரவர, நாவறட்சியும் தாகமும் அதிகமாகிக் கொண்டிருக்கும். சமுத்திரம் நிறையத் தண்ணீர் இருக்கிறது; ஆனால் குடிப்பதற்கு ஒரு துளித் தண்ணீர் இல்லை. கழுகுகள் அதிக நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இராது!

ஏதோ ஒரு மெல்லிய சத்தம் - தாழ்ப்பாள் திறப்பது போன்ற சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். மதில் சுவரின் அடிப்பக்கத்தில் ஒரு சிறிய துவாரம் தென்பட்டது போல் இருந்தது. அடுத்த நிமிஷம், அந்தத் துவாரத்தில் ஒரு முகம் காணப்பட்டது. ஆகா! அது ஒரு பெண்ணின் முகம். பைனாகுலரை உடனே எடுத்துக் கண்ணில் வைத்துக் கொண்டு பார்த்தேன். பைனாகுலர் என்னை ஏமாற்றுகிறதா, அல்லது பசி தாகத்தினால் நான் சித்தப்பிரமை அடைந்துவிட்டேனா? பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்; பல சாதி பல இனங்களைச் சேர்ந்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். நேரிலும் பார்த்திருக்கிறேன். சினிமாக்கள், நாடகங்கள், டெலிவிஷன் காட்சிகள் ஆகியவற்றிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இம்மாதிரி அழகிய ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை. அழகு மட்டுமல்ல உலகில் எத்தனையோ அழகிகள் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்ணினுடைய முகத்தில் தோன்-