பக்கம்:மயில்விழி மான்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

41

அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும். தாய் நாடு சேர்ந்ததும் நேரு சர்க்காரிடம் சொல்லிக் கப்பல்கள் அனுப்பி அமுதத் தீவிலுள்ளவர்களைத் தாய் நாட்டுக்கு அழைத்து வரச் செய்வது என்று தீர்மானித்தேன். அசுரத் தீவில் உள்ளவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. பஸிபிக் சமுத்திரத்தில் எத்தனையோ தீவுகளில் அம்மாதிரி காட்டுமிராண்டிகள் உளர் என்பதை நான் அறிந்திருந்தேன் அன்றோ?

எனவே கப்பல் புறப்படும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஏன் அங்கே கப்பல் நீடித்து நிற்கிறது. அதிலிருந்து புறப்பட்டுப் போய்த் திரும்பும் விமானங்கள் எதற்காக அப்படிப் போய் வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவரும் சொல்லவுமில்லை. கடைசியில் ஒரு நாள் கப்பல் அங்கிருந்து புறப்பட்டது. சுமார் முந்நூறு மைல் தூரத்துக்கு அப்பால் சென்று மறுபடியும் நின்றது. விமானங்கள் மீண்டும் கிளம்பிச் சென்றன.

சில நிமிஷ நேரத்துக்கெல்லாம் ஆயிரம் பதினாயிரம் இடிகள் சேர்ந்தாற் போல இடித்தது போன்ற ஒரு சத்தம் கேட்டது. அம்மாதிரி காது செவிடுபடும்படி ஒரு கோர பயங்கரச் சத்தத்தை அதுவரை நான் கேட்டது கிடையாது. சிறிது நேரத்துக்கெல்லாம் வெடித்த இடத்திலிருந்து புகைத் திரள் கிளம்பி வானை அளாவியதுடன் நாலு திசையும் பரவியது. கப்பலில் இருந்தவர்களையெல்லாம் உடம்பை மூடிக்கொள்வதற்காகக் கவசம் அணிந்து கொள்ளச் சொன்னார்கள்.