மயில்விழி மான்
3
ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வேண்டுமென்று சில நாளாக எனக்கு ஆவல்!"
இதைக் கேட்டதும் என்னை அறியாமல் வாய் விட்டுச் சிரித்து விட்டேன்.
"எதற்காகச் சிரிக்கிறீர்?" என்று கேட்டார்.
"எதற்காகவா? எல்லாம் வள்ளுவர் பெருமானுடைய வாக்கை நிறைவேற்றுவதற்காகத்தான்."
"'இடுக்கண் வருங்கால் நகுக!' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார் அல்லவா?"
"எனக்குத் தெரிகிறது. சொற்பொழிவு ஆற்றுவதற்கு இவ்வளவு அவசரமா வண்டியைச் சாலையின் நடுவில் நிறுத்த வேண்டுமா என்று நினைத்துச் சிரிக்கிறீர். யக்ஷனுடைய கேள்விக்குத் தருமபுத்திரர் கூறிய பதிலை உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். இலக்கியத் துறையில் ஈடுபட்டவர்கள் திடீர் திடீரென்று ஒவ்வொருவராகக் காலமாகிக் கொண்டு வருகிறார்கள்!..."
அவர் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறாரா, அல்லது எனக்கு எச்சரிக்கை செய்கிறாரா என்று எண்ணி வியந்தேன்.
"ஆகையால், ஒவ்வொருவரும் ஏதாவது முக்கியமாகச் செய்ய வேண்டிய காரியமிருந்தால், ஒத்திப் போடாமல் உடனே செய்து விட வேண்டும். இந்த வண்டி போகிற வேகத்தைப் பார்த்தால்...?"
"எல்லாவற்றுக்கும், நீங்களும் ஒத்திப் போடாமல் உடனே ஆரம்பித்துவிடுவது நல்லது."