பக்கம்:மயில்விழி மான்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

62

நாட்டிலிருந்து பிரபல நாதஸ்வர வித்வான்கள் எல்லாரையும் அடிக்கடி கோயில் உற்சவங்களுக்கு வரவழைப்பார்கள். எல்லாருடைய வாசிப்பையும் நன்றாக கேட்டு ஆனந்திப்பார்கள். நாதஸ்வர வித்வான் யாரைக் கூப்பிட்டாலும் தவுலுக்கு மட்டும் தவறாமல் என்னைக் கூப்பிடுவார்கள்.

என் குடும்பத்தார் அடிக்கடி தங்களையும் ஒரு முறை இலங்கைக்கு அழைத்துப் போகும்படி கேட்பதுண்டு. நானும் 'ஆகட்டும்' 'ஆகட்டும்' என்று தட்டிக் கழித்து வந்தேன். இந்தத் தடவை மூன்று உற்சவக் கச்சேரிகள் சேர்ந்தாற்போல் வந்தபடியால் சுமார் இருபது நாள் வரை இலங்கையில் நான் தங்க வேண்டியதாயிருந்தது. குடும்பத்தை அழைத்துப் போவதற்கு இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று எண்ணி எல்லோருமாகப் போகத் தீர்மானித்தோம். சில காலமாக நீலமணி மிக்க உற்சாகக் குறைவுடன் கிறுக்குப் பிடித்தவள் போல் இருந்தாள். "ஒரு நாள் நம்முடைய மானத்தை வாங்கிவிட்டு ஓடிப் போய்விடுவாளோ?" என்று கூட எண்ணினேன். உண்மையைச் சொல்லப் போனால் நீலமணியை உத்தேசித்தே குடும்பம் முழுவதையும் அழைத்துப் போக முடிவு செய்தேன்.

இலங்கைப் பிரயாணச் செய்தி அறிந்ததும் நீலமணி உற்சாகம் அடைந்தாள். "பிரயாணம் என்றைக்கு மாமா?" என்று அடிக்கடி கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தாள். கடைசியாகப் பிரயாண நாளும் வந்தது.