உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

289

என்னும் அரும்பெரும் நூலினை அடிகள் இயற்றி வெளியிட்டனர். ‘சோமசுந்தர நாயகர் வரலாறு' என்னும் ஒரு நூலையும், அடிகளார் எழுதியுள்ளார்.

திருவாளர்கள் நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், தணிகைமணி இராவ்பகதூர் வ.சு. செங்கல்வராய பிள்ளை, திருப்புகழ் மணி டி.எம். கிருட்டினசாமி ஐயர், மைய அரசின் முன்னாள் அமைச்சர் பி. சுப்பராயன், திவான்பகதூர் ஆர்.வி. கிருட்டின ஐயர், இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை, இந்திய விடுதலை இயக்கச் சான்றோர் சி. என். முத்துரங்க முதலியார், பேராசிரியர் மணி திருநாவுக்கரசு முதலியார், ஆசிரியர் இளவழகனார் நாரண துரைக்கண்ணனார் முதலிய எத்துணையோ பலர், அடிகளிடம் தமிழ் பயின்று சிறந்த பெருமக்களாவர்.

தமிழை வளர்க்கும் தொண்டில் தலை நின்ற அடிகளார், தமிழகத்திற்கே தனிச் சிறப்பாக உரிய சைவசித்தாந்தக் கொள்கையினைப் பரப்பி வளர்க்கவும், மிக விரும்பி முற்பட்டு முயன்றார். அதன் பயனாக 7-7-1905 அன்று, திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் அவர்களின் திருமடத்தில் அவர்களின் திருமுன்னிலையில், 'சைவ சித்தாந்த மகாசமாசம்' என்னும் சமயப் பெரு நிறுவனம் ஒன்றைத் தோற்றுவித்து, அதன் வளர்ச்சி குறித்துச் சிறந்த முறையில் பெருந்தொண்டு ஆற்றினார். இன்று அது கடல் கடந்த வெளிநாடுகளிலும் பரவிப் புகழ்பெற்றுப் பல அரும்பெரும் பணிகளை ஆற்றி விளங்கி வருகின்றது.

L

அடிகளார் தம்முடைய 27ஆம் அகவையில் 'ஞானசாகரம்’ அல்லது ‘அறிவுக்கடல்' என்னும் பெயரில், ஒரு சிறந்த தமிழ் இதழைத் தொடங்கி நடத்த முற்பட்டார். அதன்கண் வெளிவந்த அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், தமிழறிஞர்களுக்குப் பெரு விருந்தாக இருந்தன. உறங்கிக் கிடந்த தமிழ் மக்களைப் பல்லாற்றானும் தட்டி எழுப்பின. அடிகளாரின் பல நூல்கள் முதன் முதலில், அவ்விதழிற் கட்டுரைகளாக வெளிவந்தனவே யாகும். அதன்கண் வெளிவந்த 'கோகிலாம்பாள் கடிதங்கள்’ ‘குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி' என்னும் நூல்களைத் தம்முடைய இளமைக் காலத்திற் படிக்க நேர்ந்ததன் பயனாக, பிற்காலத்தில் புதினங்களும், சிறுகதைகளும் எழுதும் அறிவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/318&oldid=1581866" இலிருந்து மீள்விக்கப்பட்டது