உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
117

தெளிந்துகொண்டேன்.என்னைச் சுற்றியுள்ளார்க்கு என் நினைவு ஒவ்வொன்றும் தெளிவாய்த் தோன்றியதோடு, என்னுடை சொற்களும் நன்கு புலப்படுத்தப்பட்டன. புறம்பேயுள்ள ஒரு பொருளைப் பற்றி நீங்கள் பேசிக்கொள்வது போலவே, யான் அப்புறப்படுத்திவந்த உடம்பைப் பற்றியும் பேசிக் கொண்டோம். எனக்குப்பின் என் உடம்போடு விடப்பட்ட ஐம்பொறிகளைப் பற்றிய உணர்ச்சியால் யான் இதற்கு முன்னெல்லாம் சிறிது அறிவு மூடப்பட்டிருக்க, இப்போதோ யான் ஆன்ம சக்திகள் முழுதும் நிறையப் பெற்ற ஆவியாகக் குறிப்பிட்டுப் பேசப்பட்டேன்.எனக்கு முதலில் உண்டான நினைவு: யான் என் புதல்விகளோடு பேசக்கூடுமா? என்பதேதான்; ஆனால், அஃது என்னாற் கூடவில்லை; அஃதாவது செவிப்புலனாகும் ஒலி அங்கிருக்க முடியாது; ஆயினும், அவர்கள் உள்ளத்தில் யான் எண்ணியவற்றைத் தெளிவாகவும் இனிது விளங்குமாறும் பதியவைக்கக்கூடும். என் உடம்பு அழிந்து போயிற்றென்றும், உயிராகிய தீப்பொறி அவிந்து போயிற்றென்றும் தான் தெரிந்திருந்தாலும் என் கடைக்கோடி மகள் யான் தன் எதிரிலிருப்பதை நன்கு அறிந்திருந்தாள்.

இதனை அடுத்து எனக்குவந்த ஆன்ம உணர்ச்சியாவது இயக்கத்தைப் பற்றியதேயாம். குதிரைகளின் மேலாயினும், அல்லது வேறு வழக்கமான ஊர்திகளிலாயினும் சூக்கும உலகத்தின் ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்கு யான் கொண்டுபோகப் படுதலைக் கண்டேன். இப்போது யான் புதிது தோன்றிய ஆன்ம உணர்ச்சியாகிய இச்சையின் வலிவைத் தெளியலானேன். என் தோழர், ‘நாம் இப்போது நமது சூக்கும உலக விடுதியைப் போய்ப் பார்ப்போம்' என்று எனக்குக் கூறினார். ஏறிச்செல்வதற்கு ஏதேனும் ஓர் ஊர்தி கிடைக்குமா வென்று சுற்றி நோக்கினேன்; இவ் விருப்பம் என்மனத்தில் ஏறியவுடனே, முதலில் மெதுவாகவும், பின்னர் எனது விருப்பம் மிகுதிப்படுதலும் மிகுந்த விரைவோடும், கடைசியாக இடையே பொருள்கள் இருந்தாலும் யான் அவற்றைக் காண ஏலாத அத்தனை விரைந்த செலவோடும் யான் சவாரி போதலை வியப்புடன் கண்டேன்.நாங்கள் விரைந்து சென்ற அச் செலவு ஓர் இமைப்பொழுது தான் இருக்கும். நாங்கள் அளவுபடாத இடைவெளியைக் கடந்து சென்றதாகத் தோன்றியது. சில வேளை உலகங்கள் பல எம்மைக் கடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/150&oldid=1623859" இலிருந்து மீள்விக்கப்பட்டது