உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
125

பிரதான விஷயமா யிருந்தது. அவர் புதியனவாகக் கண்டு பிடித்த உண்மைகளே சடத்தின் தோற்றங்கள் என்று சொல்லப் படுகின்றன. தமக்குப் பிரியமான அவ்விஷய ஆராய்ச்சி யினாலும் படிப்பினாலும் அவர் மாத்திரமே அதே சூக்கும உலகத்திலுள்ள மற்றவர்களுதவியோடு பருப்பொருள் அசைவுகளையும் இயக்கங்களையும் ஓசைகளையும் மண்ணுலகத்திலுள்ள மந்திர சக்தியுள்ளோர் வழியே வெளிப்படும் ஆவிகளையும் பற்றிய குறிப்புகளை உண்மைப் படுத்திக் காட்டிக் கொண்டிருந்தார். அவரைத் தலைமையாகக் கொண்ட ஆவேசக் கூட்டத்தவர் அவரிடத்தினின்றும் பல உண்மைகளைத் தெரிந்து பிறகு மற்ற ஆன்மாக்களுக்கு அவற்றை அறிவுறுத்துகின்றனர். இப்போது இவ் ஆவிகள் இம் மண்ணுலக மெங்கும் பரவிச் சிற்சத்தி, சடசத்தியை ஆளவல்லதாம் உண்மையை மாந்தருக்கு வெளியிட்டு மெய்ப்படுத்திக் காட்டுகின்றனர். இவ் விளக்கங் களிற் புலனாகி அவர்தம் விசேட மனவியற்கையோடு பொருத்தமுற்று நிற்கும் குறிகளையும் இடங்களையும் பற்றிச் சொல்வதற்கு எனக்கு நேரமும் இல்லை; இஃது அவசியமும் அன்று. எனினும், பருப்பொருளில் உண்டாம் தோற்றங்கள் அலை அலையாய் எழுகின்றன வென்றும், இவைகள் ஒரு மையத்தினின்றும் தோன்றி இந்நிலவுலகத்தில் நெடுந்தூரத்தில் உள்ளவர்களும் இச் சத்திகளிற் சிறிது பெறும் அளவுக்குக் கடலலைகள் போல இம் மண்மேற் பரவிச் செல்கின்றன வென்றும் நீங்கள் தெரிதல்வேண்டும். சூக்கும ஆவி வடிவங்கள் கட்புலனாகும் என்னும் உண்மையானது முதன்முதல் அமெரிக்கா நாட்டிற் றோன்றி இப்பொழுது இங்கிலாந்து நாட்டின் மேற் றாவிச்செல்கின்றது. அஃது இங்கும் வந்து கிட்டியது; இனி அது தூரதேசங்களுக்குஞ் சென்று சேரும்; கடைசியாக, இன்னுந் தோன்றாத பிறிதோர் அலையினாற் பின்றொடரப்படும். ஆகவே, இஃது ஒழுக்கநூல் முறை யாதலோடு பௌதிக நூல் நுட்பங்களைத் தெரிந்து கொண்ட ஒரு மேலான ஏற்பாடாகவும் தோன்றுகின்றது. நிலத்தின் மேலுள்ள பௌதிகநூல் வல்லார் பலரைவிடச் சூக்கும உலகங்களில் உள்ளோர் இப் புதிய சத்திகளின் இயற்கையைத் தெரிந்துகொள்வதிலும் ஆராய்வதிலும் நிரம்பவுங் கருத்தாயிருக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/158&oldid=1624385" இலிருந்து மீள்விக்கப்பட்டது