இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ மறைமலையம் - 3 ❖ |
இன்னும் பிளவை கழலை முதலான கொடுநோய்க் கட்டிகளை அறுத்தெடுக்க வேண்டினால், அப்போதும் அவர்களை அங்ஙனமே அறிதுயிலிற் போகச்செய்து அவர்க்குச் சிறிதும் நோய் தெரியாமலே அவற்றை அறுத்தெடுத்து அக்கொடுநோயைத் தீர்க்கின்றனர். இவ்வாறெல்லாம் நோய் கொண்டார் அந்நோயின் துன்பந் தெரியாமலே அதனினின்றும் விடுவிக்கப்படுதற்கு இது பேருதவி புரிதலால் இதனை மருத்துவர் ஆவார் ஒவ்வொருவருந் தெரிந்து பழகி இதனைக் கையாண்டு வருவரானால் இதனாற் பல நலங்களும் உலகத்தில் உண்டாம் என்று திண்ணமாய்ச் சொல்லலாம். கண்ணுங்கருத்தும் ஒன்று கூடிமுனைத்து நின்றாலன்றிப் பிறரிடத்து அறிதுயில் வருவித்தல் இயலாதாகையால், இவை யிரண்டனையும் ஒன்று சேர்த்து நிறுத்தும் பழக்கத்தினைச் செவ்வையாய்ப் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.