❖ மறைமலையம் - 3 ❖ |
ஒரு கிழமையிலும் பின்னுஞ் சிலர்க்கு இரண்டு கிழமையிலும் அதனைத் தொடர்பாக முயன்று வருவிக்கலாம் மேலும், துயிற்றுவோர் அறிதுயில் வருவிக்கும் முறைகளில் நன்கு பழகிப் பழகித் தேர்ந்திருப்பாராயின், அவர்க்கு அப்பழக்கத்தால் அவ்வாற்றல் மிக முறுகி நிற்கும். அத்தகையவர் ஒருவரையோ அன்றி ஓர் ஆயிரவரையோ ஓரிடத்தில் ஒரு நொடிப்பொழுதில் அறிதுயிலிற் செலுத்தமாட்டுவர்.
அங்ஙனம் அது கூடுமாயினும், அறிதுயிலிற் செல்லச் சிறிதும் விருப்பமில்லாதவர்க்கு அதனை வருவித்து அவரைத் தம்வழிப்படுத்துமாறு எங்ஙனமெனின்; ஒவ்வொருவர்க்கும் நாடோறும் இயற்கையான தூக்கம் வருவது உண்டாகையால், அவர் அறியாமலேயே அவரிடஞ் சென்று, அதிலிருந்து அவரை அறிதுயிலுக்குப் போகச் செய்யலாம். அதற்குரிய முறை யாதெனின்; அதனையுங் காட்டுவாம்; அறிதுயிலிற் செல்ல விருப்பமில்லாத ஒருவர் இயற்கையான தூக்கத்தில் நன்றாய் அயர்ந்துறங்கும்போது, துயிற்றுவோர் ஏதோர் அரவமுஞ் செய்யாமல் அவர் பக்கத்தில் அமைதியாய்ச் செல்லல் வேண்டும். சென்று மிகவுந் தாழ்ந்த குரலிலே அவரை நோக்கித் “தூங்கும், நன்றாய் அயர்ந்து தூங்கும், அஞ்சவேண்டாம், நீர் விழிக்கக்கூடாது, ஆழ்ந்த அயர்ந்த தூக்கத்திற் செல்லும், தூக்கம், தூக்கம், அயர்ந்த தூக்கம், ஆழ்ந்த தூக்கம்” எனத் திருப்பித் திருப்பிப் பலகால் உறுத்தி அழுத்தமாய் மெதுவாகச் சொல்லுக. இங்ஙனஞ் சொல்லுகையில், அவர் விழித்தெழும் அடையாளங்கள் காணப்படுமாயின், அப்போது அதனை நிறுத்திவிடுக. அப்படி யல்லாவிட்டால், உமது வலது கையால் அவரது தலையைத் தொட்டு ‘எனது குரல் ஒலியைத் தவிர வேறு எந்த ஒலியையும் நீர் கேட்கமாட்டீர்; நீர் மிகவும் அயர்ந்து ஆழ்ந்து உறங்குகின்றீர்’ என்று சொல்லுக. அதன் பிறகு அவரை நோக்கி ஏதேனுங் கேள்வி கேட்கலாம். ‘இப்போது மணி என்ன?’ என்றாயினும், ‘இப்போது நீர் ஒரு முல்லைப்பூவை முகருகின்றீர், அதன் மணம் எப்படியிருக்கின்றது? என்றாயினும், வினவுக. அவற்றிற்கு அவர் விடை சொல்லாம லிருப்பராயின், விடை கூறும்படி வற்புறுத்து உரைக்க. பின்னர் விடைகூறுவர். மணி இன்னதென்றாவது, முல்லைப்பூ நன்றாய் மணக்கின்ற தன்றாவது அவர் மொழிகுவராயின், அவர் விழித்துக் கொள்ளாமல் நினைவற்ற அறிதுயிலிலேதான் இருக்கின்றனர்