உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62

❖ மறைமலையம் - 3 ❖

காரியங்களைச் செய்யும்போதெல்லாம் “யான் இவற்றினின்று எப்போது விடுபடுவேன்! எப்போது யான் என் மனத்தை ஒருவழிப்படுத்தி எல்லாம் வல்ல எம்பெருமான் றிருவருளைப் பெறுவேன்! பிறப்பு இறப்புத் துன்பங்களினின்றும் யான் மீளும்நாள் எந்நாள்” என்று எந்நேரமும் சிந்தித்தபடியாகவே நாட்கழிப்பராதலால், இப்படிப்பட்ட பெரியோர் இவ்வுலகக் கட்டினின்றும் அகன்று மேலுலகங்களிற் சென்ற பிறகு, திரும்ப இங்குள்ளவர்கள் வருந்தி அழைப்பினும் இங்குள்ளவரோடு வந்து பரும்பாலும் உறவு கலக்கமாட்டார்கள். இந் நிலவுலகத் தொடர்பை வெறுத்துச் சென்றவர்கள் மறுபடியும் இதனை விரும்பி வரமாட்டார்கள் என்பது உண்மையேயன்றோ? இதற்கு, இப்போது சூக்குமசரீர வாசியாயிருக்கும் கிளாட்ஸ்டன் துரையவர்கள் ஸ்டெம் துரையவர்களிடம் மொழிந்த சொற்களே சான்றாகுமன்றோ? அப்படியாயின் திரும்பிவரப் பிரியமில்லாத கிளாட்ஸ்டன் அவர்கள் ஸ்டெட் துரையவர்களிடம் திரும்பி வந்து பேசியது என்னையெனின்; ஸ்டெட் அவர்கள் நற்சிந்தையும் நற்செய்கையும் உள்ள பரோபகார துரைமகனாராதலானும், இவர்க்கு உதவி புரிபவரான யூலியா என்னும் மாதர் சிரோமணியார் சூக்குமசரீரத்திலிருந்தபடியே ஸ்டெட் அவர்களிடம் திரும்பி வரும்படி கிளாட்ஸ்டன் அவர்களை வேண்டி அழைத்தலானும் அவர் வேண்டா விருப்பாய்த் திரும்பி வந்து அங்ஙனம் உரையாடினார். இதுகொண்டு, இங்கிருந்து அழைப்பவர்கள் பரோபகார சிந்தையும் தூய அறிவும் உடையராயிருப்பின் மேலுலகங்களிற் சென்றோர் ஓரோவொருகால் திரும்பி வந்து இவர்களுடன் உரையாடுவார் என்பது இனிது அறியப்படும். அங்ஙனம் அவர் வேண்டா விருப்பாக வந்து உரையாடினும், அவர் பரோபகாரமாக இவ்வுலகத்திற் செய்த நற்செய்கையை எடுத்துக்காட்டி அவருக்கு உற்சாகத்தை ஊட்டி பின்னுஞ் சில உதவிகள் செய்யும்படி வேண்டினால் அவர் அதற்கு இணங்கிச் செய்வரென்பதும் கிளாட்ஸ்டன் துரையவர்கட்கும் ஸ்டெட் துரையவர்கட்கும் நடந்த உரையாடலினால் இனிது அறியலாகும். ஆனாலும், பரோபகாரமான காரியமன்றிப் பிறிதொன்றும் செய்தற்கு அவர் உடன்படமாட்டார் என்பதனை இது படிப்போர் நன்றாக மனத்திற் பதித்தல் வேண்டும். இங்கேயிருந்த நாட்களில் தீயசெய்கைகளை இடைவிடாது செய்து மனம் வைரமேறி இறந்துபோன தீயோர் சூக்குமசரீரவாசிகளாய் இருள் உலகத்தில் தீய நினைவோடுதானே அலைந்து திரிவர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/95&oldid=1628620" இலிருந்து மீள்விக்கப்பட்டது