உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207

கோட்டையில் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டபொழுது, மயிலப்பன் சேர்வைக்காரர், கோட்டைக்குள் இருந்த மன்னரை விடுவித்து மீண்டும் இராமநாதபுரம் ஆட்சிப்பீடத்தில் அமர்த்துவதற்கு முயற்சித்தார். 2அந்த முயற்சி தோல்வியுற்றதால் இராமநாதபுரம் சீமையெங்கும் கி. பி. 1797 ல் மக்கள் கிளர்ச்சி ஒன்றைத் தோற்றுவித்து கும்பெனியாரது நிர்வாகத்தைப் பணியவைக்க முயன்றார். கும்பெனியாரது ஆயுதபலம் மக்களை மடக்கியது. ஆதலால், மீண்டும் முதுகுளத்துார் வட்டார மக்களது ஏகாதி பத்திய எதிர்ப்பு வெறியை முடக்கிவிட்டு, கும்பெனியாரது ஆயுத பலத்தை ஆயுதக் கிளர்ச்சியினால் நிலைகுலையச் செய்தார். நாற்பத்து ஒரு நாட்கள் பரங்கியரைப் பலப் போர்முனைகளில் சந்தித்த இவர், சுயநலக்காரர்களது துரோகத்தால் தனது முயற்சியில் தோல்வியுற்று தஞ்சாவூர் சீமைக்குத் தலைமறைவாகப் போய்விட்டார்.

ஆறுமாதங்கள் ஆனபிறகு நிலைமையைத் தெரிந்துகொள்ள நெட்டூர் திரும்பியவர். அப்பொழுது ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியில் நின்ற சிவகங்கைச் சேர்வைக்காரர்களது ஆதரவுடன் இராமநாதபுரம் சீமையில் வெள்ளையரை இறுதிப்போருக்கு மக்களைத் திரட்டி கும்பெனித்தளபதிகள் மார்ட்டினிங், மில்லர், வெடிப்பர்டு, அக்கினியூ ஆகியோரைத் திணரவைத்தார்; என்றாலும் காலம் பரங்கிகளுக்குச் சாதகமாக இருந்ததால் மறவர்சீமையின் விடுதலை வரலாறு மருது சேர்வைக்காரர்கள் தூக்கி்ல் தொங்கியதுடன், முற்றுப்பெறாமல் முடிந்துவிட்டது.

மயிலப்பன் சேர்வைக்காரரது பேராற்றலுக்கு இடமில்லாது போயிற்று. அவருடன் போரிட்டு வீரமரண மெய்தியவர்கள் தவிர எஞ்சியவர்கள் அனைவரையும் கர்னல் அக்கினியூ பிடித்து ஆங்காங்கு தூக்கில் தொங்கவிட்டான். அவர்களுடன் தொடர்பு கொண்டு இருந்த கும்பெனியாரது எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு ஆதரவாக இருந்த எஞ்சிய எழுபத்து மூன்று பேர்களையும் விலங்கிட்டு நாடு கடத்தி, மூவாயிரம் மைல் தொலைவில் உள்ள பினாங் தீவில் சிறை வைத்தான். என்றாலும் அக்கினியூவின் இரத்த தாகம் அடங்கவில்லை. சிவகங்கைச் சேர்வைக்காரரின் போராட்ட அணியைச் சேர்ந்த, கும்பெனியாரது கைக்கூலிகளுக்குக் கடுக்காய்


2 Rajayyan Dr. K: South Indian Rebellions (1975) p.72