பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



302

26

இருபத்தாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கலா சொன்ன

அவமரியாதைக் கதை

"கேளாய், போஜனே! அழகு மிகு சென்னையிலே ‘ஆபட்ஸ்பரி, ஆபட்ஸ்பரி' என்று ஒர் அழகு மாளிகை உண்டு. அந்த மாளிகையிலே நடைபெறவிருந்த விழா ஒன்றுக்கு எங்கள் விக்கிரமாதித்தர் வந்து கொண்டிருந்தகாலை அவருடைய கார் வழியிலே கொஞ்சம் 'மக்கர்' செய்ய, எதற்கும் குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதைத் தம்முடைய குறிக்கோளாகக் கொண்டிருந்த விக்கிரமாதித்தர் சட்டென்று காரை விட்டுக் கீழே இறங்கித் தம் கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, 'விழா ஆரம்பமாக இன்னும் ஐந்தே நிமிஷங்கள்தான் இருக்கின்றன. காரைச் சரி செய்துகொண்டு போவதாயிருந்தால் குறித்த நேரத்தில் நாம் அங்கே போய்ச் சேர முடியாது. நான் முன்னால் நடந்தே போய் விடுகிறேன். நீ பின்னால் காரைச் சரி செய்துகொண்டு வா!’ என்று பாதாளசாமியிடம் சொல்லிவிட்டு நடக்க, ஆபட்ஸ்பரி மாளிகை வாசலில் நின்று கொண்டிருந்த ஆடம்பரதாரிகள் சிலர் அவரை உள்ளே விடாமல் தடுக்க, ‘அப்படியா சமாசாரம்?’ என்று அவர் தம் காரை நோக்கி ‘விறுவிறு’ வென்று திரும்பி வருவாராயினர்.

அதற்குள் காரைச் சரி செய்துவிட்ட பாதாளசாமி மிஸ்டர் விக்கிரமாதித்தரை எதிர்கொண்டு வந்து அழைக்க, அவர் தம் காரில் ஏறிக்கொண்டு மறுபடியும் ஆபட்ஸ்பரி மாளிகைக்கு அவசர அவசரமாகச் செல்வாராயினர்.