பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


‘நீங்கள் இருவரும் எப்படியாவது போங்கள்; அவள் எனக்குத்தான்; எனக்கே எனக்குத்தான் என்றான் மற்றொருவன்.

இதனால் ஏற்பட்ட சர்ச்சையில் நண்பர்களாயிருந்த மூவரும் விரோதிகளாகி, ஒருவரை விட்டு ஒருவர் பிரிய, அவர்களில் ஒருவன் மற்ற இருவருக்கும் தெரியாமல் அந்தப் பெண்ணின் தந்தையைச் சந்தித்து, ‘உங்கள் பெண்ணை நான் மணந்துகொள்ள விரும்புகிறேன்!’ என்று சொல்ல, ‘சரி' என்று சொல்லிவிட்டான் அவன்.

அதே மாதிரி இன்னொருவன் அந்தப் பெண்ணின் தாயைச் சந்தித்து, ‘உங்கள் பெண்ணை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன்’ என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்க, ‘சரி' என்று சொல்லிவிட்டாள் அவள்.

மற்ற இருவரையும் பின்பற்றி மூன்றாமவனும் அந்தப் பெண்ணின் அண்ணனைச் சந்தித்து, ‘உங்கள் தங்கையை நான் மணந்துகொள்ள விரும்புகிறேன் என்று சொல்ல, 'சரி' என்று சொல்லிவிட்டான் அவன்.

பெண்ணுக்குரியவர் மூவர்; அந்தப் பெண்ணை மணந்து கொள்ள விரும்பியவர் மூவர். அவர்களும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இவர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டனர்; இவர்களும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அவர்களிடமிருந்து வாக்குறுதி பெற்றுக் கொண்டு விட்டனர்.

விஷயம் அம்பலத்துக்கு வந்தபோது, 'யாருக்கு யார் அந்தப் பெண்ணைக் கொடுப்பது? யார் அவளுக்கு மாலையிடுவது?’ என்று ஒருவருக்கும் விளங்கவில்லை!

நீண்ட நேரம் தாடியை உருவி யோசிப்பதற்குப் பதிலாகத் தலையைத் தடவி யோசித்த பிறகு மந்திரவாதி சொன்னான்:

‘நாளை காலை மூவரும் கூடாரத்துக்கு வாருங்கள்; என் பெண்ணை ‘ஜக்கம்மா!' என்று அழைத்துப் பேசுங்கள்;