பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

முதற் குலோத்துங்க சோழன்

பெரும்பாகத்திலும் இதனைச் சூழ்ந்துள்ள பிறவிடங்களிலும் தன் வெற்றிப் புகழைப் பரப்பிய வீரர் தலைமணி என்றுரைத்தல் சிறிதும் மிகைப்படக் கூறியதாகாது. இவனது படைத்தலைவர்களும் அமைச்சர்களும் இவனைப் போலவே வீரத்தன்மை வாய்ந்தவர்களாய் இவனுக்கு உசாத்துணையாய் அமர்ந்து இவனது வென்றிமேம்பாடு யாண்டும் பரவுதற்குக் காரணமாயிருந்தனர் என்பது ஈண்டு அறியத்தக்கது. அன்னோருள் சிலரது வரலாற்றை மற்றோர் அதிகாரத்திற் காணலாம்.

இவன் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த வேந்தன் ஆவன் ; சங்கத்துச் சான்றோர் நூல்களையும் பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலாய நூல்களையும் நன்கு பயின்றிருந்தான். ஆசிரியர் சயங்கொண்டாரும் இவனைப் பண்டித சோழன் என்று கலிங்கத்துப் பரணியில் ஓரிடத்தில் குறித்துள்ளார்.[1]இவன் புலவர்களது கல்வித் திறத்தை அளந்து கண்டறிதற்குரிய பேரறிவு படைத்தவனாயிருந்தமையின் அன்னாரிடத்துப் பெருமதிப்பும் அன்பும் வைத்திருந்தான். அன்றியும், அவர்கட்கு வேண்டியன அளித்துப் போற்றியும் வந்தான். எனவே, இம்மன்னன் புலவர்களைப் புரந்துவந்த பெருங்கொடை வள்ளல் ஆவன். இவன் ' கலையினொடுங் கவிவாணர் கவியினொடும் இசையினொடும் '[2]

பொழுது போக்கி வந்தனன் என்பர் கவிச்சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டார். இவன், செந்தமிழ்ப் புலமையுடையவனாயிருந்தமையோடு வடமொழிப் பயிற்சியும் பெற்றிருந்தான். அன்றியும், இவன் வேங்கி நாட்டில் ஆட்சிபுரிந்தபோது அந்நாட்டு


  1. 2. க. பரணி - தா. 519.
  2. 3. ஷ 264.