பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

பட்டன் நினைத்தான். ஆகவே யாரையும் துணைக்கு அழைத்துச் செல்ல அவன் விரும்பவில்லை. மறுநாட் காலைவரை பொறுத்திருக்கவும் விரும்பவில்லை. தனியே சென்றான்; நாய் மட்டும் தொடர்ந்தது.

சிறிது நேரத்தில் அவன் களவு போன மாட்டு மந்தையைக் கண்டான். அதை வளைத்துச் செல்லும் வன்னியரை எதிர்த்துப் போரிட்டான். பத்துப் பேர் இறந்தனர். ஒருவன் எங்கேயோ ஓடிவிட்டான். இப்போர் காட்சியைப் பாடகர் பின்வருமாறு வருணிக்கிறார்.

“வாள் கொண்டு வெட்டி மடிந்தார் சிலபேர்,
வல்லயத்தில் குத்தி மாண்டார் சிலபேர்,
ஊளையிட்டுக் கொண்டு உருண்டார் சிலபேர்,
முட்டு மடிந்து கிடப்பார் சிலபேர்,
பட்டபின் வெட்டாதே என்பார் சிலபேர்”

போர் முடிந்தது என்று எண்ணிய முத்துப்பட்டன் உடலில் வழிந்த உதிரத்தைக் கழுவ ஆற்றங்கரைக்கு வந்தான். நாயும் வந்தது. முகம் கைகழுவ பட்டன் குனிந்ததும் முதுகில் ஒரு குத்து விழுந்தது. திரும்பிக் குத்தினவனை முத்துப்பட்டன் குத்தினான். முத்துப்பட்டன் ஓடைக்கரையில் செத்து விழுந்தான். முதுகில் குத்தியவனும் சற்றுத் தொலைவில் விழுந்து இறந்தான். அவனைப் பாடகர், “சப்பாணி, நொண்டி, ஒளிந்திருந்தவன்” என்று இழிவாகக் கூறுகிறார்.

நாய் வீட்டுக்கு ஓடிற்று. குடிசை வாசலிலே கணவன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த மனைவியர் நாயைக் கண்டு பதைத்தனர். அது அவர்களை அழைத்தக் கொண்டு காட்டினுள் ஓடிற்று. ஓடைக்கரையில் கணவனது உடலைக் கண்டனர். அதன் மேல் விழுந்து ஒலமிட்டு அழுதனர்.

“முகத்தோடே முகம் வைத்து முத்தமிட்டுக் கொண்டழுதார்
நாலு கழியலியே, நாலா நீர் கூடலையே,
ஏழுகழியலியே, ஏழா நீர் கூடலையே,
தாலி கொண்டுவந்த தட்டானும் போகலையே,
கொட்டிப் பறையனுக்குக் கொத்துக் கொடுக்கலையே,