உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்


மல்லாமல், சோஷலிச வேட்கையும் மேலோங்கியது. இதன் விளைவாக, காங்கிரசுக்குள்ளேயே காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் என்ற பிரிவொன்றும் தோன்றியது. இவர்கள் இந்திய விடுதலையின் இறுதி லட்சியம் சோஷலிசமும் தான் என்று வலியுறுத்தி வந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே தமிழ் நாட்டில் பல பத்திரிகைகள்தோன்றின. “சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே?” என்று பாடிய பாரதியின் சுதந்திரப் பள்ளுப் பாட்டினால் உத்வேகம் பெற்று, 1931இல் ‘சுதந்திரச் சங்கு’ப் பத்திரிகை தோன்றியது. இதன் காரணமாக, இதன் பதிப்பாசிரியரான கணேசனும், ஆசிரியராகவிருந்த சுப்பிரமணியனும், தமது இறுதிக் காலம் வரையிலும் சங்கு கணேசன், சங்கு சுப்பிரமணியன் என்றே பெயர் பெற்றிருந்தனர். இதே காலத்தில் தான் பின்னர் ‘தினமணி’யின் ஆசிரியராகவிருந்த டி.எஸ். சொக்கலிங்கம் ‘காந்தி’ பத்திரிகையைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பாரதியின் ‘தாயின் மணிக்கொடி பாரீர்!’ என்ற பாடலால் உத்வேகம் பெற்று, சிறந்த வசனநடைகர்த்தாவான வ.ரா.வும், கே. சீனிவாசனும் ‘மணிக்கொடி’ என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கினர். இதே காலத்தில் ராஜாஜியின் சீடரான கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி) ‘ஆனந்தவிகடன்’ வாரப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்து வந்தார். அநேகமாக, அவர்கள் அனைவருமே தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்களாவர். இந்தக் காலம் தேச உணர்வும் எழுச்சியும் மிக்க காலமாக மட்டுமல்லாமல், சோஷலிசத்தின்பால் ஈடுபாடும் தோன்றிவந்த காலமாகும். சொல்லப்போனால், பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளைத் தமது முதல் நம்பர் எதிரியாகக் கருதிய ராஜாஜி, அந்தக் காலத்தில் தம்மோடு சிறையில் இருந்த சகதேசபக்தர்களுக்கு சோஷலிசத்தைப் பற்றி உரைகள் ஆற்றினார். இந்த உரைகள் ‘Chats behind bars’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும், ‘அபேதபாதம் என்றால் என்ன? என்ற தலைப்பில்