உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்

15


மல்லாது அவரது குருநாதராகவும் அரசியல் தலைவராகவும் விளங்கிய ராஜாஜியும் காந்தியக் கருத்துகளை வலியுறுத்தும் ‘திக்கற்ற பார்வதி’ போன்ற பல கதைகளையும் எழுதினார்; அவற்றில் சில ‘மணிக்கொடி’யிலும் கூட வெளிவந்தன. இதனால் அவரும் அக்காலத்தில் ஒரு சிறுகதை எழுத்தாளராகவும் மதிக்கப்பட்டார்.

புதுமைப்பித்தனின் தனிச்சிறப்பு :

இந்த முப்பதாம் ஆண்டுகளில் கே. சீனிவாசன் நடத்திவந்த ‘மணிக்கொடி’யிலும், பின்னர் பி.எஸ். ராமையாவின் நிருவாகத்திலிருந்த ‘மணிக்கொடி’யிலும், புதுமைப்பித்தன் பேய்க்கதைகள் உட்படப் பல்வேறு விதமான கதைகளை எழுதிவந்த போதிலும், அவற்றுக்கிடையே ‘எதார்த்தவாதம்’, ‘விமரிசன எதார்த்தவாதம்’ என்று கூறும் இலக்கணத்துக்குப் பொருந்திய கதைகளும் பல இருந்தன. அவரது இந்த முப்பதாம் ஆண்டுக் கதைகளில் சோஷலிசக் கருத்தின் தாக்கமும் கூட ஓரளவுக்கு இருந்தது எனலாம். இதனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் முரண்பாடுகளையும், அவல வாழ்வையும் பிரதிபலிக்கும் ‘இது மெஷின்யுகம்’, ‘மனிதயந்திரம்’, ‘நாசகாரக் கும்பல்’ போன்ற கதைகளோடு, அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு முல்க் ராஜ் ஆனந்த் எழுதிய ‘இரு இலையும் ஒரு மொட்டும்’ என்ற ஆங்கில நாவலின் தகுதிக்குச் சற்றேனும் குறையாத விதத்தில், இலங்கைத் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு, ‘துன்பக்கேணி’ என்ற நெடுங்கதையையும் அவர் எழுதினார். ‘துன்பக்கேணி’ கதையில் வெயிலின் கொடுமையைப் பற்றிக் கூறும்போது, அந்த “வெள்ளிக்கிழமை மத்தியான வெயில் ஹிட்லரை நல்லவனாக்கியது” என்றும் எழுதினார். மேலும் ‘விநாயக சதுர்த்தி’ என்ற கதையில், “மாவிலைகளைத் தோரணமாகக்