உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்

63


இந்தத் துறையில் ஆ. சிவசுப்பிரமணியன், கே.ஏ. குணசேகரன் முதலியோர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இருவரும் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நாட்டுப்புறச் சமய நம்பிகைகள் முதலியன பற்றி எழுதியுள்ள நூல்களும் குறிப்பிடத்தக்கவை. இவற்றின் தாக்கம் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியிலும் பிரதிபலித்து வருகின்றது.

சினிமா, நாடகம் ஆகிய துறைகளில் நமது சாதனைகள் என்று பெருமையடித்துக் கொள்வதற்கு அதிகமாக ஒன்றுமில்லை. திரைப்படத் துறையில் ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’, ஆர்.கே. கண்ணன் கதை வசனம் எழுதிய ‘பாதை தெரியுது பார்’, முகவை ராஜமாணிக்கம் வசனம் எழுதிய ‘காலம் மாறிப் போச்சு’ முதலியவற்றைக் குறிப்பிட வேண்டும். இவற்றிலும் குறைநிறைகள் உண்டு. இவை தவிர, பாளை சண்முகம் தயாரித்த ‘காணி நிலம்’, ‘ஏழாவது மனிதன்’ ஆகியவையும் நினைவில் கொள்ளத்தக்கவை. நாடகத்துறையில் நாற்பதாம் ஆண்டுகளிலேயே நாம் சில முயற்சிகளை மேற்கொண்டதுண்டு. அந்தக் காலத்தில் அரசியல் பிரசாரத்துக்காகப் ‘புதுமைக் கலா மண்டலம்’ என்ற பெயரில் ஒரு மன்றம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் ‘கந்தன் காட்டிய வழி’, ‘வங்கப்பஞ்சம்’ போன்ற நாடகங்களை நடத்தியதுண்டு. ஆனால் அந்த முயற்சி தொடரவில்லை; செழுமை பெறவில்லை. இதன்பின் நமது சார்புடைய மன்றங்களாகத் தொடங்கிய தச்சநல்லூர் முல்லை நாடக மன்றம், பொன்மலை வள்ளுவர் நாடக மன்றம், தஞ்சை சிவராமன் நாடக மன்றம், பொள்ளாச்சி செஞ்சுடர் கலா மன்றம் முதலியவை சில முற்போக்கான நாடகங்களை நடத்தி வந்ததுண்டு. என்றாலும் அவை சரியான போஷனையும் வழிகாட்டலும் இல்லாமல் தேய்ந்து இற்றுப் போய்விட்டன. நாடகங்கள் எனக் கூறும்போது அறுபதாம் ஆண்டுகளில் ‘புதிய பாதை’ என்ற நாடகத்தோடு தொடங்கி இன்றுவரையிலும் பல சிறந்த முற்போக்கான நாடகங்களை வழங்கி வரும் கோமல் சுவாமிநாதனைச் சிறப்பாகக்