70
முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
என்றும் கூறிச் சென்றுள்ளார். “பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே” என்று நெஞ்சோடு கிளத்திய பாரதிதான் “வில்லினை எடடா! வில்லினை எடடா! இப்புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா” என்றும் பாடிச் சென்றான். எனவே மனிதாபிமானம் மனிதர்களாகப் பிறந்த எல்லோரின் மீதும் பேதாபேதமின்றிக் கொள்கின்ற மந்தையுணர்ச்சியல்ல. உண்மையான மனிதாபிமானம் என்பது மனிதப் பிறவிகளாகப் பிறந்தும், மனித உணர்ச்சியேயற்று மிருகங்களாக வாழ்பவர்மீது வெறுப்பும், மிருகங்களைப் போல் கேவலமாக சூழ்நிலையில் வாழ நேர்ந்தும் மனிதப் பண்புகளைக் குன்ற விடாது பாதுகாத்து வரும் மக்களோடு சோதரபாசமும், அவர்கள்பால் விருப்பும் கொள்வதுமேயாகும். இவ்வாறு சொல்லும் போதே மனிதாபிமானம் என்பது, மனிதகுலத்தின் பெரும்பான்மையான மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, மனித வர்க்கத்தின்பால் கொள்ளும் நேசமும் பாசமுமேயாகும் என்பது சொல்லாமலே விளங்கும். அதாவது நாம் புரிந்து கொள்கின்ற, ஒப்புக்கொள்கின்ற மனிதாபிமானம் பெரும்பான்மையான மக்களுக்கு நலம் பயக்கும், அவர்கள் சார்பில் நின்று குரல் கொடுக்கும் ஜனநாயகத் தன்மை கொண்ட மனிதாபிமானமாகவே இருக்க வேண்டும்.
இத்தகைய ஜனநாயக மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு இயற்றப்படும், எழுதப்படும் கலை இலக்கியங்கள் எல்லாவற்றையுமே நாம் முற்போக்குக் கலை இலக்கியங்களாகக் கருத வேண்டும்; இத்தகைய கலை இலக்கியங்களைக் கிரமமாக வளர்த்தெடுத்துச் செல்லும் பரிணாம வளர்ச்சிப் பாதையில் இதே ஜனநாயக மனிதாபிமானம் சோஷலிச ஜனநாயக மனிதாபிமானமாக வளர்ச்சியடையவே செய்யும் என்றே நான் கருதுகிறேன்.
இங்கு மார்க்சியத்தின் மூலவர்களான மார்க்ஸையும் ஏங்கெல்சையும் பற்றி லெனின் எழுதியுள்ள வரிகளை