உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்


செய்யவும் கலை இலக்கிய அமைப்புகள் உருவாக்கும் முயற்சி தொடங்கப்படவில்லை.

20-ம் நூற்றாண்டில் பாரதி பாண்டிச்சேரியில் இருந்த போது பாரதிதாசனை அவருடைய ‘எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்ற பாடலுடன் சுதேசமித்திரனுக்கு அறிமுகம் செய்யும்போது பாரதி கவிதா மண்டலம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகின்றார். நெசவுத் தொழிலோடு கவிதைத் தொழிலை ஒப்பிட்டு, கவிதை எப்படி உருவாக வேண்டும் என்று அவருடைய ‘தராசு’ விளக்குகிறது. தன் கலை இலக்கியக் கொள்கையை விளக்கவும், இளைஞர்களை அந்தப் போக்கில் வளர்க்கவும் பாரதியின் விருப்பத்தைக் ‘கவிதா மண்டலம்’ என்ற தொடர் சுட்டுகிறது. ஆயினும் அது அமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனமாக விதிமுறைகளுடன் செயல்பட்டதாகத் தெரியவில்லை. கனக சுப்புரத்தினத்தை அது பாவேந்தர் பாரதிதாசனாக உருவாக்கிற்று.

பாரதிதாசன் தன் பங்குக்குத் தமிழ்க் கவிஞர் மன்றம் என்ற நோக்கங்களும், வடிவமும் தெளிவுபடுத்தப்பட்ட அமைப்பை உருவாக்கினார். கவிதைத் துறையின் பாரதிதாசனின் உருவ உள்ளடக்க மரபுகளை உள் வாங்கி, வளரும் ஒரு கவிதை ஸ்தாபனமாக அது உருப்பெற்றது. இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் கடற்கரைக் கவியரங்கம் தமிழகக் கவியரங்கங்களுக்கு ஒரு முன்னோடி.

30-களில் தேச விடுதலை என்ற உணர்வோடு, தேசீய இனங்கள் தங்கள் தங்கள் பண்பாடுகளைச் செழுமைப்படுத்த தன்னிச்சையான முயற்சிகளும் தொடங்கின. தேசிய இன உணர்வு பொங்கி எழுந்தது. தமிழ் மொழிப் பற்றும், தமிழ் இசைப்பற்றும், இக்காலத்தில் வலுப்பெற்றன. கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள் போன்ற பெருங்கவிஞர்களின் பெயரால் அமைப்புகள் தோன்றி வளர்ந்தன. இவை அந்த அந்தக் கவிஞர்களின் நூல்களின் சிறப்பைச் சொற்பொழிவுகள் வாயிலாக மக்களிடம் பிரபலப்படுத்தின. செட்டி நாட்டில் தமிழ் நூல்கள், கட்டுரைகள், வெளியிட