உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்


தன. இந்தப் பண்பாட்டு வளர்ச்சியின் சாரமே 1961-ல் கலை இலக்கியப் பெருமன்றம் என்ற பேரமைப்பாக உருப்பெற்றது.

ஜீவா ஒரு வலுவான தொழிற் சங்க வாதி. நாடறிந்த அரசியல் வாதி. ஆனால் அடிப்படையில் அவர் காலூன்றி நின்றது பண்பாட்டுத்தளத்தில்தான். அதில் நின்றுகொண்டு தான், அவர் சகலத்தையும் பார்த்தார், செயல்பட்டார். இக்கால கட்டம் கனிந்து நிற்பதை, புதிய ஒரு பண்பாட்டு இயக்கம் பிறப்பெடுக்க உருத்திரண்டு கொண்டிருப்பதை அவரால் மிகத்தெளிவாகக் கண்டு கொள்ள முடிந்தது. அக்காலத்தில் அவருக்கு உதவியாக இதே உணர்வுடன் ஆற்றல் வாய்ந்த ஒரு தளபதிகளின் படைவரிசையுமிருந்தது; பேராசிரியர் நா. வானமாமலை, தொ.மு.சி. ரகுநாதன், ஆர்.கே. கண்ணன், எம்.பி. சீனிவாசன், புதுக்கோட்டை சேதுராமன், கு. சின்னப்ப பாரதி, ஜெயகாந்தன், பாவலர் வரதராசன், டி.கே. பால சந்திரன், கவி. வே. நாரா. சிவகாமசுந்தரி போன்ற ஆற்றல்மிக்க தளபதிகள் அவரைப் புரிந்துகொண்டும், அக்கால கட்டத்தின் குரலைப் புரிந்து கொண்டும், ஒரு பெரும் படையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஜீவாவின் வழிகாட்டுதலில் இப்பெரும் படையின் கூட்டு முயற்சியே கலை இலக்கியப் பெருமன்றமாக 1961-ல் உருப்பெற்றது.

கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோற்றத்துக்கான சூழ்நிலையை ஜீவா கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “இன்று தமிழ்க் கலை இலக்கியம் வளர்ந்திருப்பது போல் என்றாவது வளர்ந்ததுண்டா? பேச்சுத்தமிழ் இன்று இருப்பதுபோல் இருந்திருக்கிறதா? நாடகத்தின் நிலை என்ன? சமீபகாலத்தில் இத்துறையிலும் திரையுலகத் துறையிலும் நாம் பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். மேலும் செய்தித்தாள் துறையின் வளர்ச்சியைப் பாருங்கள். கலை இலக்கியங்களின் வளர்ச்சிக்க வாய்ப்புகள் எவ்வளவு பெருகியுள்ளன ..... உரைநடைத்துறை, நாடகம், ஓரங்க நாடகம், வானொலி நாடகம், தத்துவதரிசனம், வரலாறு,