பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“தமைக்காக்க! பிறர்நலமும் காக்க” என்னும்
சகஜகுண மேனுமுண்டா? இல்லை. இந்த
அமானிகள்பால் சினிமாக்கள் நாட கங்கள்
அடிமையுற்றுக் கிடக்குமட்டும் நன்மை யில்லை.
முன்னேற்றம் கோருகின்ற இற்றை நாளில்
“மூளிசெயல் தாங்காத நல்லதங்கை
தன்னேழு பிள்ளைகளைக் கிணற்றில் போட்ட”
சரிதத்தைக் காட்டுகின்றார் சினிமாக் காரர்!
இந்நிலையில் நாடகத்தின் தமிழோ, “காதை
இருகையால் மூடிக்கொள்” என்று சொல்லும்.
தென்னாட்டின் நிலைநினைத்தால் வருந்தும் உள்ளம்!
செந்தமிழின் நிலைநினைத்தால் உளம்வெடிக்கும்!