பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

முள்வேலிகள்

பின்பே வீட்டைப் பதிவு செய்து வாங்கிக் கொள்ள முடியும். ஆகவே ஹவுஸிங் யூனிட்காரர்கள் மேல் கேஸ் போட அவன் துணியவில்லை. உண்மையில் கேஸ் தள்ளுபடி செய்யப்பட்ட அன்று அவனைவிட அதிகமாக அவனுக்காகப் பாகவதரும், அம்மிணி அம்மாவும் வருத்தப்பட்டார்கள்" அவர்களோடு அவனாகவே விரோதம் பாராட்டிப் பேசுவதை நிறுத்தி விட்டதால் அவனிடம் பேசமுடியாது. என்று அவன் வீட்டில் இல்லாத போது சுகன்யாவிடம் சொல்லி வருத்தப் பட்டார் பாகவதர்.

"உங்க வீட்டுக்காரருக்குச் சத் சங்கம்-நல்ல சகவாசம் இல்லே... தார் பூசறவன், சண்டைக் கோழி, தகராறுப் பிரியர்களோட வார்த்தையைக் கேட்டிட்டு அநாவசியமா அலைஞ்சு பணத்தையும், மனத்தையும், கெடுத்துக்கிறதைப் பார்த்து எனக்கே வருத்தமா இருக்கும்மா! பணத் திமிர்லே வம்புக்காகக் கொழுப்பெடுத்துப் போய்க் கோர்ட்டுக்குப் போறவா நெறையப் பேரை எனக்குத் தெரியும். உங்க வீட்டுக்காரரை மாதிரி ஒரு குடும்பஸ்தன் இப்பிடி ஒண்ணு மில்லாததுக்காக மூவாயிரம், நாலாயிரம்னு கோர்ட்டுக்கு அழுததைப் பண்ணின பாவம்னுதான் சொல்லணும் அம்மா..."

சுகன்யாவைத் தனியே பார்த்து அம்மிணி அம்மாவும் வருத்தப்பட்டாள்: "அநாவசியமா உம் புருஷன் எங்களை விரோதியாப் பாவிச்சு இப்பிடி நடந்துக்க வேண்டாம். எங்களை விரோதிச்சுக்க ஆசைப்பட்டுக் கடைசியிலே அந்த மகிழ்மாறனத் தவிர இந்தக் காலனி முழுதுமே உம் புருசனுக்கு விரோதமாப் போயாச்சு."

கணவனுக்காக-ஏங்கல் தாங்கலில் பணமோ பண்டமோ ஒத்தாசையோ எதுவும் செய்யக்கூடிய அம்மிணி அம்மாளைச் சுகன்யா ஒரு நாளும் தவறாகப் புரிந்து கொண்டதில்லை. புருஷன் வீட்டில் இல்லாத போது சுகன்யா அவர்கள் வீட்டில் போய்ப் பேசிக் கொண்டிருப்பது உண்டு. வீடியோவில் புதுப்