பக்கம்:மேனகா 1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

மேனகா

விட்டோமா? அந்தக் கெட்ட கழுதையும், அவளுடைய அப்பனும் இப்படிச் செய்தால் எங்களை என்ன செய்யச் சொல்லுகிறாய்? காரணத்தை யெல்லாம் அவர்களிடம் போய்க் கேள். அவர்களுடைய சூதெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும்?

பெருந்தேவி:- அவள் தன்னுடைய டிரங்குப் பெட்டியி லிருந்து எதையோ எடுத்துக் காப்பியிலே போட்டதை நான் கண்ணாரப் பார்த்தேன். அதற்குத் தகுந்தாற்போல, இவனுடைய புத்தியும் மாறிப் போயிருக்கிறதே. இனி குட்டிச் சுவரில் முட்ட வெள்ளெழுத்தா? அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். அதைப்போல் தனக்குத்தான் அருமையாக ஒரு டிரங்குப்பெட்டி வந்து விட்டதென்று முப்பது நாழிகையில் முன்னூறு தரம் திறந்து பார்ப்பதும் பூட்டுவதுமே வேலை.

கோமளம்: - மகா அற்ப மனிஷி! அந்தத் திறவுகோலை எங்கேயாவது ஆணியில் மாட்டினால் நாங்கள் பெட்டியைத் திறந்து அதிலிருக்கும் அவளுடைய ஆஸ்தியை எடுத்துக் கொள்வோமாம். பெட்டியைத் திறக்கும்போது கூட தாலிச்சரட்டிலிருந்து திறவுகோலை வேறாய் எடுக்கமாட்டாள்; அப்பா! என்ன சாமர்த்தியம்!- என்றாள்.

சகோதரிமார் இருவரும் ஒரே பிடிவாதமாய் மேனகா தனக்கு மருந்து போட்டுவிட்டாள் என்று கூறியதை அவன் சிறிதும் நம்பாவிடினும், அவளுடைய பெட்டியைத் திறந்து, அதற்குள் சந்தேகநிவர்த்திக்குரிய குறி ஏதாயினும் இருக்கிறதா வென்பதைப் பார்க்க அவன் மனதில் ஒருவித ஆசை உதித்தது. அவன் உடனே, “அடிகோமளம் அந்தப்பெட்டியை இங்கே எடுத்துக்கொண்டு வா, அதைத் திறந்து பார்ப்போம். அதில் வசிய மருந்தைக் காட்டுங்கள்” என்றான்.

பெரு:- மருந்துதான் உன் வயிற்றுக்குள் போய்விட்டதே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/162&oldid=1250212" இலிருந்து மீள்விக்கப்பட்டது