பக்கம்:மேனகா 1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிச்சையெடுத்தது பெருமாள்; பிடுங்கித்தின்றது அனுமார்.

183

பெரு:- போதுமப்பா! முன்பு மேனகாவை அழைத்து வருகிறதற்காக அவன் மனதில் ஆசையை உண்டாக்கினோம், அது இப்போது ஆபத்தாய் முடிந்தது. தலைவலி போகத் திருகுவலி வந்தது. அவனுக்கு இப்போது அவளுடைய பைத்தியமே பெருத்த பைத்தியமாய்ப் பிடித்துக்கொண்டது. இப்போது அதை மாற்றுவது கடினமாய் இருக்குமென்று தோன்றுகிறது.

சாமா:- நாம் புதுப்பங்களாவிற்குப் போனால் கூடிய சீக்கிரம் அவனைச் சரிப்படுத்திவிடலாம். நான் இன்று ராத்திரியே போய்க் காரியத்தை முடித்து விடுகிறேன். வராகசாமியை நாம் இப்போது வெளியில் அதிகமாக விடக்கூடாது. நான் போய்த் தேடி அவனை அழைத்து வருகிறேன் - என்று சொல்லிவிட்டு பவுனை எடுத்துப் பையிற் போட்டுக் கொண்டு வெள்ளிப்பாத்திரத்தில் இருந்த சீடைகளை வயிற்றில் போட்டு நிறைத்துக்கொண்டு ஒய்யார நடைநடந்து தாம் அத்தனை வருஷங்கள் பாடுபட்டதற்குக் கூலி அந்த மூன்று நாட்களிலேதான் கிடைத்ததென்று நினைத்துப் பேருவகை கொண்டு தம்மை மறந்து தமது வீடு சென்றார்.

திடீரென்று தமக்குப் பெருத்த தொகைகள் கிடைக்கத் தாம் பணக்காரராய் விட்டதை தமது மனைவி மீனாட்சியிடம் சொல்லவும், பவுனையே கண்டறியாத அவளுக்கு அத்தனை பவுன்களையும் காட்டவும் பெரிதும் ஆவல் கொண்டார். அவருடைய கட்டுக்கடங்கா ஆத்திரத்தில் அவளிடம் விஷயத்தைச் சொல்லவும் அவளைத் தனிமையில் வா என்று கூப்பிடவும் மனம் பொறுக்க வில்லை; தாழ்வாரத்தில் நின்ற பெண்டாட்டியை குழந்தையைத் தூக்குவதைப் போல சுலபமாய்த் தூக்கிக்கொண்டு அறைக்குள் போய்விட்டார்.

❊ ❊ ❊ ❊ ❊
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/201&oldid=1250723" இலிருந்து மீள்விக்கப்பட்டது