வைத்தியர்
அகத்தியபுரம் ஸ்டேஷனில் தினமும் ஒரு ரூபாய் ஏழே காலணாவுக்கு டிக்கட் விற்று வந்தார்கள். ஓரோர் தினத்தில் இரண்டு ரூபாய்க்கு வியாபாரம் நடந்து விட்டதானால், ஸ்டேஷன் மாஸ்டர் மூர்ச்சை போட்டு விழுவது வழக்கம்.
அகத்தியபுரம் என்று ஓர் ஊர் இருப்பதாகவே வெகு நாள்வரை தமிழ் நாட்டு ஜனங்களுக்குத் தெரியாமலிருந்தது. ஆகவே, ஜனங்கள் போக்கு வரத்தும் அந்த ஸ்டேஷனில் குறைவு.
அந்த ஊரில் ஒரு கோயிலோ, குளமோ, அல்லது ஒரு குட்டையோ விசேஷமாக இருந்தால்தானே ஜனங்கள் வருவார்கள்? மெனக்கட்டு ஊர் என்று ஒன்று இருந்தால் அங்கே ஏதோ ஒரு தொழிலாவது பிரசித்தி அடைந்திருக்க வேண்டும். ஒன்றுமில்லாத ஊரைக் கண்ணெடுத்தும் பார்ப்பவர்கள் யார்? எனவே ரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டர் முதற்கொண்டு ஸ்டேஷன் மாஸ்டர் வரை சீட்டாடுவதைத் தவிர்த்து வேறு வேலையின்றித் தவியாய் தவித்தார்கள்.
இப்படிக் காசுக்கு உதவாத அந்த ஊர் மிகப்பிரசித்தி பெற்ற கிராமமாக மாறிவிடும் என்று அந்தச் சங்கரனுக்கே தெரியாது.
✽
சங்கரன் ஒரு சாமான்ய மனிதன். அவனுக்கு ஆஸ்திக புத்தி அபாரமாயிருந்தது. "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்" என்ற முதுமொழியை நம்பி வாழ்ந்து வந்தான் அவன்: வேதாந்தி. உலக வாழ்க்கையே மாயம், அதில் தான் இருப்பது நியாயம் என்று அவன் எண்ணிக்கொண் டிருக்கவில்லை.
சங்கரனுக்கு ஸ்வப்பன சாஸ்திரத்தில் பரம நம்பிக்கை உண்டு. பிரதி தினமும் ராமாயணப் பாராயணத்திற்குப் பிறகு, திரிஜடையின் சொப்பன கட்டத்தை ஒருமுறை படித்து' முடிப்பான். அவனுக்கு அதில் அவ்வளவு நம்பிக்கை.