உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வசூலான வாடகை

47


வீட்டுக்காரர் ஒரு மாதம் பொறுத்தார்; இரண்டுமாதம் காத்திருந்து பார்த்தார் ; மூன்றாவது மாதம் சங்கர ராவுக்கு ஆள் அனுப்பினார். சரியான பதில் கிடைக்காததால் கோடம்பாக்கத்திலிருந்தபடியே ராவுக்கு ஒரு கடிதமும் எழுதினார். அதற்கும் சரியான பதில் இல்லாமற் போகவே, சபாபதி அய்யருக்கு அசாத்தியக் கோபம் வந்துவிட்டது. கோடம்பாக்கத்திலிருந்து புறப்பட்டு வந்து சங்கர ராவைக் கண்டு கண்டிப்பாகப் பேசினார். சங்கர ராவ் சாவதானமாக, "உம்முடைய பணம் எங்கேயும் போய்விடாது. பெட்டியில் இருக்கிற மாதிரி நினைத்துக்கொள்ளும். அடுத்த மாதம் எப்படியும் கொடுத்து விடுகிறேன்" என்று சமாதானமாகப் பதில் சொல்லி அனுப்பினார்.

இதற்குள் வெயில் காலம் வந்து விட்டதால் சபாபதி அய்யருக்குக் கோடம்பாக்கத்தில் வசிக்க முடியவில்லை. வெயில் தீக்ஷண்யம் அங்கே பொறுக்க முடியாமல் இருந்தது. வாடகை கொஞ்சம் அதிகமானாலும் பாதகமில்லை என்று பூந்தமல்லியில் வீடு பார்க்க ஆரம்பித்தார்.

அநேக தெருக்களைச் சுற்றிப் பல வீடுகள் ஏறி இறங்கின பிறகு, கடைசியாக ஒரு வீடு அவர் மனத்துக்குப் பிடித்தமாயிருந்தது. வெளித் தாழ்வாரத்து ஜன்னல் சும்பிகளில் கட்டப்பட்டிருந்த 'டு லெட்' போர்டைக் கவனித்தார்; "முப்பது ரூபாய் வாடகை. முழு விவரத்திற்கு ஜார்ஜ் டவுன் தம்புலிங்கத் தெரு 78-ம் நெம்பர் வீட்டில் விசாரிக்கவும்" என்று அதில் விவரம் கொடுக்கப்பட்டிருந்தது.

அதைக் கண்டதும் சபாபதி அய்யருக்கு ஒன்றும் புரியவில்லை. "தம்புலிங்கத் தெரு 78-ம் நெம்பர் வீடு நம்முடைய தல்லவா? அங்கே யாரை விசாரிப்பது? ஒரு வேளை அங்கே குடியிருப்பவர்களின் சொந்தக்காரர்கள் அல்லது சிநேகிதர்களின் வீடா யிருக்குமோ?" என்று யோசித்துப் பார்த்தார். உடனே கிளம்பிச் சென்று தம் வீட்டில் விசாரித்ததில் அது சங்கர ராவுடைய வீடு என்று தெரிந்தது.

சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுத் தான் ஒண்டுக்குடித்தனம் செய்துகொண்டிருந்தார் சங்கர ராவ்.