பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

91



கடம்பர்களில் பலரைச் சாதுரியமாகப் பொன்வானி முகத்துவாரத்திற்கு அழைத்துச் சிறைபிடித்து விட்டாலும், குமரன் நம்பியின் முதன்மையான நோக்கம் என்னவோ இன்னும் நிறைவேறாமலேயே இருந்தது. ஆந்தைக்கண்ணனிடம் சிறைப்பட்டுவிட்ட இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்க வேண்டுமென்பதே அவனுடைய நோக்கமாயிருந்தும் அந்த உயிர் நோக்கம் இந்த விநாடிவரை நிறைவேறவே இல்லை. அதற்கான வழித்துறைகளைச் சிந்தித்துச் சிந்தித்து முடிவில் ஆந்தைக்கண்ணன் மேல் படையெடுத்து அவனுடைய மரக்கலங்களை மறித்துச் சோதனையிடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான்.

ஆனால் அதற்கு முன்பே இரத்தின வணிகர் வீட்டிலும் இரத்தின வணிகர் வீதியிலும் அவன் அந்தரங்கமாக அறிந்து கொள்ள வேண்டிய சில செய்திகள் இருந்தன. அவற்றை அறிவதற்கு அவன் முயன்றான். காலதாமதத்தால் வரும் விளைவுகளையும் அவன் சிந்தித்து வைத்திருந்தான். இந்த வேளையில் மீண்டும் உடனே வஞ்சிமாநகரத்துக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அமைச்சர் அழும்பில்வேள் அழைத்து விட்டார்.

மீண்டும் வேளாவிக்கோ மாளிகையில் நுழைவதற்குரிய தைரியத்தை அவன் தன்னுள் நிரப்பிக்கொள்ள வேண்டியிருந்தது. அமைச்சர் அழும்பில்வேளை சந்தித்துச் செல்வதாயிருந்தால் - அதுவரை ஆந்தைக்கண்ணனை வளைப்பதற்காகக் கடலுக்குள் செல்வதைத் தள்ளி வைக்க வேண்டியிருக்கும். அப்படித் தள்ளி வைப்பதனால் - தான் ஆந்தைக்கண்ணனை நோக்கிச் செல்லவேண்டிய அவசியம் நேருமுன் ஆந்தைக் கண்ணனே பொன்வானி முகத்துவாரத்தின் வழியே கொடுங்கோளுரையும் தன்னையும் தேடிவரக்கூடிய நிலை ஏற்பட்டு விடக் கூடாதே என்ற பயமும் அவனுக்கு இருந்தது.

அமைச்சரின் கட்டளையை அறவே மறுத்து ஒதுக்கவும் துணிவில்லை. தன்னுடனேயே சுற்றிக் கொண்டிருந்து மகா