பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

போய்விட்டது. கிராமத்திலே பெரிய தனக்காரக் குடும்பமாக இருந்த நாம், நொடித்துப் போய்விட்டோம். ஏதோ நான் ஓடி ஆடிப் பாடுபட்டு, நம்ம துரையிடம் வேலைக்கு அமர்ந்தேன். உன் அப்பா, படாத பாடுபட்டுக் கடைசியில்.... சொல்லக்கூட எனக்குக் கூச்சமாக இருக்கிறது. நம்ம நாலூரில் திருவிழாவின்போது அவருக்குத்தான் முதல் மாலை போடுவார்கள். அப்படிப்பட்டவர் இன்று...சொக்கலிங்கம்! நீதான் நமது குடும்பத்தை மறுபடியும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவேண்டும்; நாலுபேர் மதிக்கத்தக்க நிலைமைக்குக் கொண்டுவரவேண்டும்" என்றெல்லாம் சொல்லுவார். கேட்டுக் கொண்டிருக்கும் என் கண்களில் நீர் துளிர்க்கும். ஓரளவு படித்தாயிற்று; கணக்கு வழக்குப் பார்க்கத் தெரிந்து கொண்டேன். நல்ல வேலை மட்டும் கிடைத்துவிட்டால், நிம்மதியாக வாழலாம். தலைநிமிர்ந்து நீ நடக்கலாம். என் மகன் உத்தியோகம் பார்க்கிறான் என்று சொல்லிச் சொல்லி மகிழலாம்...”

“உத்தியோகம் நீ பார்க்கவேண்டும் என்பதுதானடா சொக்கு, என் ஆசையும். நான் சொல்லுகிற யோசனையும் அதற்காகத்தான். ஜெமீன்தார் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வேலையிலே நீ சேர்ந்து கொண்டால் போதும், – எந்தப் பெரிய உத்தியோகமும் உனக்குக் கிடைத்துவிடும். அது சாமான்யமான இடமல்ல; வெறும் ஜெமீன் வீடு அல்ல. ஜம்புலிங்க பூபதி துரைமார்களுக்கு ரொம்பவும் வேண்டியவர். எந்தப் பெரியதுரை அந்தப் பக்கத்துக்கு வந்தாலும் பூபதி! பூபதி! என்று இவரைத்தான் சுற்றிச் சுற்றி வட்டமிடுவார்கள். அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் வெள்ளைக்கார சர்க்கார் எந்தப் பெரிய உத்தியோகத்தையும் உனக்குக் கொடுப்பார்கள்...”

“ஜெமீன்தாருடைய தயவு இருந்தால் போதும் என்றுதானே அப்பா சொல்லுகிறாய்! அவரிடம் மனு செய்துகொள்ளலாம். அதற்கு நான் முழுச் சம்மதம் தெரிவிக்கிறேன். பெரிய வேலை கிடைக்கிற வரையில், அவர் வீட்டுக் குழந்தைகளுக்குப் பாடம், படிப்புச் சொல்லிக் கொடுக்