உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வண்டிக்காரன்

லலிதா மூலமாக அவருக்குத் தகவல் சிறிதளவு கிடைத்திருக்க வேண்டும். உமாவை லிங்கத்துக்கு மணமுடித்து வைக்கும் எண்ணம் ஜெமீன்தாரருக்கு ஏற்பட்டு இருப்பதுபற்றி.

வேடிக்கையாகப் பேசவும் பொழுதுபோக்குகளிலே பங்கு பெற்றுக் கொள்ளச் செய்யவும்கூடக் காளிங்கராயர் முயற்சித்தார். தன்னோடு சேர்ந்து உயர்ந்த பானம் பருகும்படியே அழைத்திடலானார்.

"மிஸ்டர் லிங்கம்! உண்மையாகவே பழக்கமில்லையா? சின்ன வயது முதலே வெள்ளைக்காரர் வீட்டில் வளர்ந்ததாகச் சொல்லுகிறார்கள்..."

"ஆமாம், ஜெமீன்தார் சார்! நான் அவர்கள் எதற்குப் பானம் பருகுகிறார்கள். எப்படிப் பருகுகிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். நமது நாட்டிலே குடிக்கிறார்களே அப்படியா அவர்கள்! தாங்களே எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், நிலை குலைந்து போகும் அளவு!"

"மிஸ்டர் டீச்சர்! இது எனக்குப் பிடிக்காது. குடிக்காதே, அது கெடுதல்—பாவம்—என்று சொல். அது பொருளுள்ள பேச்சு! ஆனால் குடி. அளவோடு குடி, நிலை குலையாதபடி பார்த்துக் கொள் என்று சொல்லாதே. அது முடியாது; கூடாது. எதற்குக் குடிக்கிறோம்? எல்லாவற்றையும் மறந்து ஒரு புதிய இன்ப உலகத்திலே உலவ. எப்போது அந்த இன்பலோகம் தெரியும்? இந்த லோகத்தைப் பற்றிய நினைப்பே அடியோடு போனால்! இந்த லோகத்து நினைப்பு எப்படிப் போகும்? நிறைய பருகினால்! எப்படி என் வாதம்!

"பிரமாதமான பேச்சு—ஆனால் அந்த இன்ப லோகம் உங்க, மனைவி லலிதாம்பிகாவின் கண்ணொளியில், புன்னகையில் இல்லையா?

"கெட்டிக்கார ஆசாமி! உன்னிடம் சொல்வதிலே என்ன தவறு! லலியின் கண்களில் நான் இன்ப லோகத்தைக் கண்டதுண்டு, முன்பு; கொஞ்ச நாளில் அது மறைந்து விட்டது.